இந்தியாவுக்கு 175 பதக்கம்

தெற்காசிய விளையாட்டில் வழக்கம் போல் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 175 பதக்கங்களுடன் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியது.

"சார்க்' அமைப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும், 11வது தெற்காசிய விளையாட்டு போட்டி தாகாவில் நடந்தது. கடந்த 12 நாட்களாக நடந்த இப்போட்டிகள், நேற்று நிறைவு பெற்றன.

இரண்டு தங்கம்:

கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் மதுரிகா, சக நாட்டு வீராங்னையான ஷாமினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் மதுரிகா 7-11, 8-11, 12-10, 11-9, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

கடைசி வரை போராடிய ஷாமினி, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுமியாதீப் ராய் (11-6, 6-11, 8-11, 11-4, 11-5, 11-9) தங்கம் வென்றார். இவரை எதிர்த்து பைனலில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் அமல்ராஜ் வெற்றி வென்றார். நேற்று நடந்த மாரத்தான் போட்டியில், இந்தியாவின் ராம் சிங் வெண்கலம் வென்றார்.

சர்வதேச அளவில் மாரத்தான் போட்டிக்கான தூரம் 42.1 கி.மீ., தான். ஆனால் தெற்காசிய போட்டியில் 34.1 கி.மீ., தூரம் தான் மாரத்தான் நடந்தது. இதனால் இப்போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முதலிடம்:

தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 175 (90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலம்) பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. 80 பதக்கங்களுடன் (19 தங்கம், 25 வெள்ளி, 36 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பாகிஸ்தானும், 97 பதக்கங்களுடன் (18 தங்கம், 23 வெள்ளி, 56 வெண்கலம்) வங்கதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

குறைவு:

கடந்த 2006 ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த 10 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய அணி, 214 (118 தங்கம், 59 வெள்ளி, 37 வெண்கலம்) பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்த முறை அதைவிட குறைவாக பதக்கங்களை பெற்றுள்ளது இந்தியா.

பதக்கப்பட்டியல்

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
இந்தியா 90 55 30 175
பாகிஸ்தான் 19 25 36 80
வங்கதேசம் 18 23 56 97
இலங்கை 16 34 54 104
நேபாள் 7 9 19 35
ஆப்கானிஸ்தான் 7 9 16 32
பூடான் 0 2 3 5
மாலத்தீவு 0 0 2 2
மொத்தம் 157 157 214 528
------------
கோலாகல நிறைவு
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான விழாவில் வங்கதேச அதிபர் ஜில்லர் ரஹ்மான், ராணுவ தலைவர் அப்துல் முபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 12 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் விழாவில் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்களை நிகழ்த்தினர். பாரம்பரிய முறைப்படி தெற்காசிய விளையாட்டின் கொடியிறக்கப்பட்டு, அடுத்து தொடரை நடத்த உள்ள இந்தியாவிடம் (2012) வழங்கப்பட்டது.

வங்கதேச ஒலிம்பிக் சங்க தலைவர் ஜென் முபின், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் கொடியை வழங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழா, மேளதாளங்கள் முழங்க இனிதே முடிந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்திய வீரர், வீராங்கனைகள், பங்கபந்து மைதானத்தில் நடந்த இவ்விழாவில், முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இறுதி அணிவகுப்பில் பெரும்பாலான அணிகளின் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
----------



கல்மாடி உறுதி
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய அணியினர் 90 தங்கம் உட்பட 173 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

அவர்களை ஊக்குவிப்பது அவசியம். மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இது குறித்து பேசி, வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய அணியினரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

வரும் 2012 ம் ஆண்டு 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவில் நடக்க உள்ளன. இதற்கான ஜோதி "சார்க்' அமைப்பு நாடுகளில் வலம் வரும். வங்கதேசத்திலிருந்து துவங்கி மற்ற நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்தடையும். இவ்வாறு கல்மாடி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment