நூறு டெஸ்ட் - சேவக் இலக்கு

டெஸ்ட் அரங்கில், நூறு போட்டிகளுக்கு மேல் விளையாட வேண்டும்,'' என, இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். டில்லியை சேர்ந்த இவர், கடந்த 2001ல் (செப்., 3-6) புளோயம்போன்டைன் நகரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

முதல் டெஸ்டில் சதம் அடித்து முத்திரை பதித்த இவர், இதுவரை 89 டெஸ்ட் (7735 ரன்கள்), 236 ஒருநாள் (7760 ரன்கள்), 14 சர்வதேச "டுவென்டி-20' (313 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டில்லி நடக்கும் முதல் டெஸ்டில் இடம் பெற்றுள்ள இவர், தனது 90வது டெஸ்டில் விளையாடுகிறார்.
இதுகுறித்து சேவக் கூறியதாவது: கிரிக்கெட் அரங்கில், பத்து ஆண்டுகளாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கடந்து, தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன். இதன்மூலம் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என்ற எண்ணம் தற்போது இல்லை. ஆனால் நூறு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாட விரும்புகிறேன். ஏனெனில் கவாஸ்கர், வெங்சர்க்கார், சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே, லட்சுமண் ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். இவர்கள் பட்டியலில் இணைய விரும்புகிறேன்.
கடந்த 2001ல், எனது முதல் டெஸ்ட் போட்டியை என்றும் மறக்க முடியாது. ஏனெனில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், முதல் டெஸ்டில் சதம் அடித்து நம்பிக்கை அளித்தேன். அப்போதிருந்த கேப்டன் கங்குலி, பயிற்சியாளர் ஜான் ரைட் வெகுவாகப் பாராட்டினார்கள். அதன்பின் டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்ததை என்றும் மறக்க முடியாது.
டெஸ்ட் அரங்கில், நிறைய சதத்தை இழந்துள்ளேன். அதிக முறை 90 ரன்களுக்கு மேல் அவுட்டாகியுள்ளேன். இதுகுறித்து கவலைப்பட போவதில்லை. கடந்த பத்து ஆண்டில் எனது செயல்பாடு திருப்தி அளிக்கிறது.
இவ்வாறு சேவக் கூறினார்.

0 comments:

Post a Comment