ஆஸி., வீராங்கனை பதக்கம் பறிப்பு

காமன்வெல்த் 100 மீ., ஓட்டத்தில் வெற்றி பெற்ற, ஆஸ்திரேலிய வீராங்கனை சாலி பியர்சனின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.


டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில், சில நாட்களுக்கு முன் நடந்த 96 கி.கி., மல்யுத்த பிரிவின் பைனல் நடந்தது. இதில் நடுவர் மற்றும் இந்திய வீரரருடன் தகாத முறையில் நடந்த, ஆஸ்திரேலிய வீரர் ஹசனே பிக்ரியின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டது.


தற்போது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய வீராங்கனையின் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெண்கள் 100 மீ., பைனல் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சன், 11.28 வினாடியில் வந்து தங்கப்பதக்கம் வென்றார். இதில் இங்கிலாந்தின் லாரா டர்னர், தவறாக ஓட முயன்றதாக "ரெட் கார்டு' காட்டப்பட்டு, பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவின் பியர்சன் தான் தவறுதலாக ஓடினார் என, இங்கிலாந்து புகார் தெரிவித்தது.


இதுகுறித்து நடந்த விசாரணையில் பியர்சன் தவறு செய்தது தெரியவந்தது. இதனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, இவரை அடுத்து 11.32 வினாடியில் வந்த நைஜீரியாவின் ஒசயேமி ஒலுடமோலாவுக்கு வழங்கப்பட்டது. காமன்வெல்த் போட்டியில் 100 மீ., ஓட்டத்தை மிக தாமதமாக கடந்த நேரம் இது தான்.
செயின்ட் வின்சென்ட் அண்டு கிரீனிடியன்சின் நடாஷா மேயருக்கு வெள்ளியும் (11.37 வினாடி), இங்கிலாந்தின் கேத்தரினாவுக்கு (11.44 வினாடி) வெண்கலமும் கொடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment