டுவிட்டர் : இந்திய வீரர்களுக்கு தடை

இந்திய வீரர்கள் "டுவிட்டர்' இணையதளத்தை பயன்படுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

"டுவிட்டர்' இணையதளத்தின் மூலம் வெளியிடப்படும் குறுந்தகவல் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை சென்றடைகிறது. இதில் இந்தியாவின் சச்சினுக்கு மட்டும் 7,05,374 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதே தகவல்களால் பல மோசமான முடிவுகளும் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வெளியிட்ட செய்தியால், அவரது பதவியே பறிபோனது. இங்கிலாந்தின் பீட்டர்சன் தேர்வாளர்கள் குறித்து கூறிய தகவலால் அபராதம் கட்டினார். இந்தவரிசையில் இந்தியாவின் யுவராஜ் மற்றும் ரோகித் சர்மாவும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யாதது குறித்து தேர்வாளர்களை கண்டித்து "டுவிட்டரில்' செய்தி வெளியிட்டார் யுவராஜ். தவிர, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான கோவா ஒருநாள் போட்டி குறித்து யுவராஜ் வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" நேற்றிரவு மீண்டும் பெய்த மழையால், "டுவென்டி-20' போல, போட்டி நடக்கும் அல்லது நடக்காமலும் போகும். எப்படியும் மதியம் ஒரு மணிக்கு முன்பாக போட்டி துவங்க வாய்ப்பில்லை,'' என்று வெளியிட்டார்.

ரோகித் அவசரம்:

இதேபோல ரோகித் சர்மா வெளியிட்ட செய்திதான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதாம். அதாவது "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட், மைதானத்தை சோதனை செய்தபின், முடிவை முறைப்படி அறிவிப்பதற்கு 10 நிமிடம் முன்பாக, ரோகித் சர்மா வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" கோவா போட்டி ரத்து செய்யப்பட்டது,'' என, தெரிவித்தார்.

பி.சி.சி.ஐ., எதிர்ப்பு:

இந்த செய்திகள் பி.சி.சி.ஐ.,க்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" போட்டி நடக்கும் நாட்களில் "டுவிட்டரை' பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்வோம். இது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து நடைமுறைக்கு வருகிறது,'' என்றார்.

0 comments:

Post a Comment