சேவக்கை வீழ்த்த திட்டம் தயார்

கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், சேவக்கை வீழ்த்த தேவையான திட்டங்களுடன் தயாராக உள்ளோம்,'' என, கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் வாட்மோர் தெரிவித்துள்ளார்.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிக ரன்கள் எடுத்தும், கெய்ல் புயலில் சிக்கி வீழ்ந்தது. அடுத்து வரும் 28ம் தேதி நடக்கும் போட்டியில் டில்லி அணியை எதிர்கொள்கிறது.


இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் வாட்மோர் கூறியது:

இந்திய அணியின் சேவக், வெஸ்ட் இண்டீசின் கெய்ல், ஆஸ்திரேலியாவின் வார்னர் ஆகியோர் அபாயகரமான வீரர்கள். இதில் சேவக், வார்னரை துவக்க வீரர்களாக கொண்ட டில்லி அணிக்கு எதிரான போட்டி, எந்த அணிக்கும் எளிதாக இருக்காது.

இந்நிலையில் சேவக் அணியை, அடுத்த போட்டியில் எதிர்கொள்கிறோம். இதில் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடுவோம்.

இதில் சேவக்கை வீழ்த்த வியூகங்கள் வகுத்துள்ளோம். தவிர, டில்லி வீரர்கள் காம்பிர், பட்டியா போன்ற வீரர்கள் எங்கள் அணியில் இருப்பதால், சற்று கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளோம்.

பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய போட்டியில் 40 ஓவரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்று டில்லி, பெங்களூரு அணிகள் மோதும் போட்டியை கவனமாக பார்க்க உள்ளோம். ஏனெனில் இதன் மூலம், அடுத்து டில்லிக்கு எதிரான போட்டியில் எங்களது வெற்றிக்கு தேவையான திட்டங்கள் ஏதும் கிடைக்கலாம்.

இவ்வாறு வாட்மோர் தெரிவித்தார்.

1 comments:

  1. புதுசா என்னத்த திட்டம் போடுறீங்க?
    பௌன்செரா போடுங்க கொஞ்சம் அடிச்சிட்டு அவுட் ஆயிடுவாரு..

    ReplyDelete