வீரர்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது

உலக கோப்பை வென்றதால் ரூ. 5 கோடி பரிசு தரவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

பத்தாவது உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 15 வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரூ. 1 கோடி பரிசு வழங்கியது. இது தங்களுக்கு போதாது என்று வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது.

இதுகுறித்து ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியில், பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி வீரர் ஒருவர் கூறியது:

உலக கோப்பை தொடரால், பி.சி.சி.ஐ.,க்கு அதிக லாபம் கிடைத்தது. இதனால் வீரர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு தரவேண்டும். எங்களைப் போன்ற சீனியர் வீரர்களுக்கு எந்த பேராசையும் இல்லை. இந்த பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் முனாப் படேல் போன்ற புதியதாக வந்த வீரர்கள் நிலை பரிதாபம் தான்.

இந்த வீரர்களால் பி.சி.சி.ஐ., அதிக லாபம் தான் கிடைத்துள்ளது. இத்தொடரில் ரூ. 1000 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளது. ஆனால், புதிய வீரர்களின் வாழ்க்கை தான் உறுதியில்லாமல் உள்ளது. ஏனெனில், அடுத்து அணியில் யார் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதேபோல பயிற்சியாளர்களுக்கும், அணி தேர்வாளர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் கொடுத்தது தவறு. கிறிஸ்டன் போன்றவர்களுக்கு அதிக தொகை தரவேண்டும்.

இவ்வாறு அந்த வீரர் தெரிவித்துள்ளார்.

ஆனால் வீரர்களின் இந்த கருத்தை ஏற்க, பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" ஒரு கோடி என்பது சிறிய தொகை அல்ல. வீரர்களுக்கு ஏற்கனவே போதிய அளவு பணம் வழங்கப்பட்டுவிட்டது. தவிர, பல மாநில அரசுகள் அவர்களுக்கு நிலம், வீடு மற்றும் பணம் வழங்கியுள்ளது. இதனால் வீரர்கள் வேண்டுகோளை ஏற்கமுடியாது,'' என்றார்.

0 comments:

Post a Comment