வரலாறு படைக்குமா சென்னை கிங்ஸ்?

ஐ.பி.எல்., தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இம்முறை பைனல் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.

நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது.

இதில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்டன. இது சாத்தியமில்லை என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், சுரேஷ் ரெய்னா(73) மற்றும் ஆல்பி மார்கலின்(28) அதிரடி கைகொடுக்க, 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது.

இதன் மூலம் சென்னை அணி, மூன்றாவது முறையாக பைனலுக்கு(2008, 2010, 2011) முன்னேறி அசத்தியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் மீண்டும் வெல்லும் பட்சத்தில் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறலாம்.


உள்ளூர் சாதகம்:

சென்னையில் பைனல் நடப்பது நமக்கு சாதகமானது. இம்முறை லீக் சுற்றில், இங்கு நடந்த 7 போட்டிகளிலும் சென்னை தான் வென்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் ராசியான சேப்பாக்கம் மைதானம் மீண்டும் அணிக்கு கைகொடுக்கலாம். தவிர, கேப்டன் தோனியின் வியூகம், அஷ்வின் சுழல், ரெய்னா, மார்கல், முரளி விஜய் ஆகியோரது அதிரடி எடுபடும் பட்சத்தில் சென்னை அணி, உள்ளூரில் கோப்பை கைப்பற்றலாம்.

இது குறித்து அணியின் முன்னணி வீரர் மைக்கேல் ஹசி கூறுகையில்,""சேப்பாக்கம் ஆடுகளத்தில் துவக்கத்தில் அதிரடியாக ஆடலாம். போகப் போக பந்து, பேட் நோக்கி வரும் வேகம் குறைந்து விடும். பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும்.

இதற்கேற்ப விளையாட கற்றுக் கொண்டதால் தான், உள்ளூரில் சென்னை அணி வலிமையானதாக திகழ்கிறது. ஆடுகளத்தின் இந்த தன்மையை புரிந்து கொண்டு விளையாட மற்ற அணிகள் சிரமப்பட வேண்டியிருக்கும்,''என்றார்.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில்,""அணியின் "மிடில்-ஆர்டர்' பலமாக இருப்பதால் தான் இக்கட்டான நிலையிலும் வெற்றி பெற முடிகிறது. சுழற்கூட்டணிக்கு அஷ்வின் தலைமை ஏற்கிறார். இவருக்கு பக்கபலமாக ஜகாதி உள்ளார். ஆல்பி மார்கல், பிராவோ, போலிஞ்சர் போன்ற வேகங்கள் இருப்பதால், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்,''என்றார்.


நம்பிக்கை இருந்தது

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில்,"" பெங்களூரு அணிக்கு எதிராக 176 ரன்கள் என்பது சற்று சிரமமான ஸ்கோர் தான். இருப்பினும், இதற்கு முன் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்து உள்ளோம். இதனால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், கடைசி நேரத்தில் எந்த ஸ்கோரையும் எட்டிவிடலாம். இதுதான் பெங்களூருவுக்கு எதிராக நடந்தது. ஏழு ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், களத்தில் இருந்த வீரர்களிடம் எவ்வித அறிவுரையும் நான் கொடுக்கவில்லை.

வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை, 100 சதவீதம் வெளிப்படுத்த வேண்டும். அதன் பின் வெற்றி தானாக தேடி வரும்,''என்றார்.

பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி கூறுகையில்,"" கடைசி ஐந்து ஓவர்கள் சரியாக பந்துவீச வில்லை. ரெய்னா 18 பந்துகளில் 46 ரன்களை எட்டினார். மேலும் இவர், நாங்கள் வீசிய பெரும்பாலான பந்துகளை எல்லை கோட்டை தாண்டி பறக்க செய்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

175 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். எளிதாக எட்ட கூடிய இலக்கு அல்ல. எங்களுடைய சரிவை தடுக்க, கடைசி ஐந்து ஓவர்கள் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். அடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பைனலுக்கு முன்னேறுவோம்,''என்றார்.

0 comments:

Post a Comment