மே 13-ல் இந்திய அணி தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியின் தேர்வு மே 13-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் மே 28-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ம் தேதி இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு செல்கிறது. அங்கு ஒரு இருபது ஓவர் ஆட்டத்திலும், 5 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

இருபது ஓவர் ஆட்டம் ஜுன் 4-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு ஜூன் 6 முதல் 16 வரை ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

மூத்த வீரர்கள் இடம்பெறுவார்களா? உலகக் கோப்பை, அதைத் தொடர்ந்து ஐபிஎல் ஆகியவற்றில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் தங்களுக்கு ஓய்வுதேவை என்று இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேசமயம் மூத்த வீரர்கள் இடம்பெறாத பட்சத்தில் ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்துவிடும்.மேலும் விளம்பர வருவாய் குறைந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனத்துடன் செயல்படும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment