ஹரியாணாவுடன் தமிழகம் இன்று மோதல்

தமிழ்நாட்டில் நடைபெறும் 63-வது சந்தோஷ் கோப்பை தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன் போட்டியில் கிளஸ்டர் 7-ல் முதலிடம் பெற்ற ஹரியாணாவுடன் தமிழகம் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

சென்னையில் ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இப் போட்டி விடுமுறை ரசிகர்களுக்கு விருந்தளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளஸ்டர் 8-ல் இடம்பிடித்திருந்த தமிழ்நாடு, லீக் சுற்றில் தான் எதிர்கொண்ட ஒவ்வோர் அணியையும் ஒரு கோலும் அடிக்கவிடாமல் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய அடுத்த கட்ட சுற்றுக்கான பயிற்சி ஆட்டம் போல ஒவ்வோர் அணியையும் தோற்கடித்து முன்னேறியது. ராஜஸ்தான் அணியை 7-0 எனவும், இமாசலப் பிரதேசத்தை 11-0 எனவும், திரிபுராவை 5-0 எனவும் தோற்கடித்து வீறுநடை போட்டுள்ளது குலோத்துங்கன் தலைமையிலான தமிழ்நாடு.

மற்ற இடங்களில்: இதே போல கோவையில் நடைபெறும் போட்டியில் கேரளம்- மகாராஷ்டிரம் அணிகளும், திருச்சியில் மிசோரம்- கோவா அணிகளும், ரெட்ஹில்ஸ் விஸ்டம் டவுன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரயில்வே- மணிப்பூர் அணிகளும் விளையாடுகின்றன.

ஒவ்வோர் இடத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், காலிறுதி ரவுண்ட் ராபின் லீக் சுற்றுக்கு முன்னேறும். காலிறுதி லீக் சுற்று முதல் அனைத்து போட்டிகளும் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப், இரண்டாம் இடத்தைப் பிடித்த சர்வீசஸ், பெங்கால் மற்றும் கர்நாடகம் ஆகிய அணிகளுடன் இணைந்து 2 பிரிவாக லீக் முறையில் விளையாடும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளிலும், இறுதி ஆட்டம் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment