சாதிக்க தவறிய மும்பை அணி

ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது முறையாக சாதிக்க தவறியது சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. சச்சின், ஜெயசூர்யா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் இடம் பெற்றும்தொடரின் அரையிறுதிக்கு கூட மும்பையால் முன்னேற முடியவில்லை.

38 முறை சாம்பியன்:

மும்பை அணியை பொறுத்த வரை, உள்நாட்டு தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்தி உள்ளது. ரஞ்சி சாம்பியன் பட்டத்தை 38 முறை கைப்பற்றிய பெருமை மிக்கது. ஆனால் உள்நாட்டுதொடராக கருதப்படும் ஐ.பி.எல்.,தொடரில் முத்திரை பதிக்க முடியவில்லை.

அதிரடி இல்லை:

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஜெயசூர்யாவின் சொதப்பல் ஆட்டம் தான். அதிரடி ஆட்டத்தை வெற்றிக்கு அடிப்படையாகக் கொண்ட ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி, இவரை நம்பி தான் களமிறங்கியது. ஆனால் ஜெயசூர்யாவின் மோசமான பார்ம் மும்பையை வீழ்த்தி விட்டது. இத்தொடரில் பெரும்பாலும் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்ததால், சச்சினும் நிதானமாக ஆட வேண்டியதாகி விட்டது. டுமினி சிறப்பாக ஆடினாலும், அவர் அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என்பது மிகப் பெரிய குறை. எல்லாவற்றுக்கும் மேலாக ரஹானே, தவான், நாயர் உள்ளிட்ட இளம் வீரர்கள் துடிப்புடன் விளையாட தவறிவிட்டனர்.

குல்கர்னி மோசம்:

சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி, ஐ.பி.எல்., தொடரில் படுமோசமாக செயல்பட்டார். ரஞ்சியில் அசத்திய இவர், "டுவென்டி-20' யில் சொதப்பி விட்டார். பார்ம் இல்லாமல் தவித்து வந்த இவரை, மீண்டும், மீண்டும் களமிறக்கி வாய்ப்பை வீணடித்து விட்டது மும்பை அணி நிர்வாகம். தவிர, முன்னணி பவுலர் ஜாகிர் கான், காயம் காரணமாக வெளியேறியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. ரஞ்சிக் கோப்பை தொடரில் கொடி கட்டிப்பறக்கும் மும்பை அணியால், ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க முடியாதது துரதிருஷ்டம் தான்.

அடுத்த ஐ .பி.எல்., போட்டியிலாவது வெற்றி கிடைக்குமா என்று எதிர் பார்ப்போம்.

0 comments:

Post a Comment