தோனிக்கு முதல் மரியாதை


ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழா நேற்று கோல்கட்டாவில் வண்ணமயமாக நடந்தது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், கத்ரினா கைப், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ஆடிப் பாடி அசத்தினர்.

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஏப்.3-மே 26) இன்று துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. 

இதன் துவக்கவிழா நேற்று கோல்கட்டாவில் உள்ள "சால்ட் லேக்' மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. முதலில் மிகப் பெரிய சிவப்பு பட்டனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்த, மறுபக்கம் குத்துவிளக்குகள் ஜொலிக்க, விழா அமர்க்களமாக துவங்கியது. 

தொடர்ந்து "டிரம்சில்' பறந்தவாறு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்த, சீனப் பெண்கள் "மெகா' முரசு அடித்து முழக்கம் எழுப்ப, அரங்கில் ஐ.பி.எல்., கோப்பையுடன் அழகிய பெண் ஒருவர் பலூனில் தலைகீழாக பறந்து வந்தார். 

பின் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் வசம் கோப்பையை அந்த பெண் வழங்கினார். அப்போது 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும் வகையில் பலூன்கள் இடம் பெற்றிருந்தன. 

அடுத்து "பாலிவுட்' நடிகை தீபிகா படுகோனே அசத்தலாக நடனமாடினார். அடுத்து ராணி போல் பவனி வந்த கத்ரினா கைப் "ஷீலா கா ஜவானி' என்ற பிரபல பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார். 

கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கானும் அசத்தலாக ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். பிரபல பாடகி உஷா உதுப், அமெரிக்காவை சேர்ந்த "ராப்' பாடகர் பிட் புல் ஆகியோர் ரம்மியமாக பாடி உற்சாகம் அளித்தனர். கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா'வுடன் துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.


தோனிக்கு  முதல் மரியாதை

துவக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் அரங்கில் அணிவகுத்து நின்றனர். பின் போட்டிகளின் போது விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வோம் என்று உறுதி அளிக்கும் வகையில் மைதானத்தில் இருந்து தொடு திரையில் விரலால் தொட்டு கையெழுத்திட்டனர். 

இதில் முதல் நபராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அழைக்கப்பட்டார். அவர் கையெழுத்திட, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

கோல்கட்டாவில் கோலாகலம் - இன்று ஐ.பி.எல்., துவக்க விழா




ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழா இன்று கோல்கட்டாவில் கோலாகலமாக நடக்க உள்ளது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், கத்ரினா கைப் மற்றும் பிரபல அமெரிக்க "ராப்' பாடகர் பிட்புல் உள்ளிட்டோர் ஆடிப் பாடி அசத்த காத்திருக்கின்றனர்.

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஏப்.3-மே 26)நாளை துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 76 போட்டிகள் என, அடுத்த 51 நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்கிறது.

 இதன் துவக்கவிழா இன்று கோல்கட்டாவில் உள்ள, இந்தியாவின் மிகப் பெரிய "சால்ட் லேக்' மைதானத்தில் நடக்கிறது. இங்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம். கால்பந்து போட்டிக்கான இந்த மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை இழையிலான களம் பாதிக்கப்படாமல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு துவங்கும். முதலில் ராட்சத பலூன் ஒன்று ஐ.பி.எல்., கோப்பையுடன் மைதானத்தில் வந்திறங்கும். "ஐ.பி.எல்., உலகம்' என்ற பெயரிலான இந்நிகழ்ச்சியில், 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும். பின் "ஓம்' என்ற வார்த்தையை குறிக்கும் வகையில் தங்களது கையில் "டார்ச்' ஒளியுடன் கலைஞர்கள் அணிவகுத்து நிற்பர்.

தொடர்ந்து "பாலிவுட்' நடிகரும் கோல்கட்டா அணி உரிமையாளருமான ஷாருக் கான், முன்னணி நடிகைகளான கத்ரினா கைப் மற்றும் தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்விக்க உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த "ராப்' பாடகர் பிட் புல் தன் பங்கிற்கு அமர்க்களப்படுத்த காத்திருக்கிறார். 

பாலிவுட் இசையமைப்பாளர் பிரித்தம் இசையில் 300க்கும் மேற்பட்டோர் நடனமாட உள்ளனர். சீனாவின் "ரெட் பாப்பி' அமைப்பை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்று திறமை வெளிப்படுத்த உள்ளனர். 

நடனப் பெண்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம், பறந்து இசைக்கும் "டிரம்ஸ்' கலைஞர்கள், "லேசர் ÷ஷா' போன்றவை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும். ஐ.பி.எல்., அணிகளின் கேப்டன்கள் அணிவகுப்பு மற்றும் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெறும். 

இது குறித்து ஷாருக் கான் கூறுகையில்,""இதுவரை இந்திய ரசிகர்கள் பார்த்திராத வகையில் துவக்க விழா மிகப் பிரமாண்டமாக இருக்கும். எனது படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு கத்ரினா, தீபிகாவுடன் சேர்ந்து ஆட உள்ளேன்,''என்றார். 

ஓய்வு முடிவு சச்சினின் கையில்


இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான சேவை செய்துள்ளார் சச்சின். அவரை ஓய்வு பெறும்படி யாரும் சொல்ல முடியாது. அவர் நினைக்கும் போது, தனது சொந்த முடிவின்படி விடைபெறுவார்,'' என, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. இவர், 198 டெஸ்டில் 15,837 ரன்கள், 463 ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்கள் குவித்துள்ளார். தவிர, சதத்தில் சதம் கண்டது உள்ளிட்ட ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

ஒரு நாள் போட்டியிலிருந்து விடைபெற்ற இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து டெஸ்ட் அரங்கில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.
இது குறித்து ராஜிவ் சுக்லா கூறியது: 

இந்திய அணிக்கு சச்சின் அதிக பங்களிப்பை கொடுத்துள்ளார். எப்போது, விடைபெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது அவர் செல்லலாம். உலக கிரிக்கெட் அரங்கில், இவரை விட அதிக சாதனைகள் யாரும் தொட்டதில்லை. எனவே, இவரை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற முடிவு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கடி காரணமாக, எடுக்கப்படவில்லை. எங்களுக்கு இலங்கை வீரர்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம். தவிர, இந்த விஷயத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்துள்ளோம். 


போட்டி மாற்றமில்லை

சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை, வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவுமில்லை. ஏனெனில், ஒரு போட்டியை, வேறொரு இடத்திற்கு மாற்ற, இரண்டு மாதங்கள் ஆகும். தவிர, ஆடுகளத்தை தயார்படுத்த, இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படும். இங்கு போட்டிகளை நடத்தக்கூடாது என மக்கள் சொல்லவில்லை. 

இலங்கை வீரர்கள் மட்டும் இங்கு விளையாடக்கூடாது என்றுதான் கூறியுள்ளனர். இதை, இலங்கை கிரிக்கெட் போர்டும் ஏற்றுக் கொண்டு விட்டது. 

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். 

கேப்டன் பதவியை துறந்தது பாதிப்பா? மனம் திறக்கிறார் சேவக்


டில்லி அணியின் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படாது,'' என, சேவக் தெரிவித்தார். 

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. கடந்த ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியின் கேப்டனாக இருந்த இவர், அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டார். 

இது குறித்த சேவக் கூறியது: 

கேப்டனாக இருக்கிறோமா, இல்லையா என நான் எண்ணிப்பார்ப்பதில்லை. தவிர, இந்தப்பதவியால், எந்தவொரு நெருக்கடியையும் உணர்ந்ததில்லை. என் பேட்டிங்கும் பாதிப்படையவில்லை. 

அப்படி கேப்டன் பதவியால் எனக்கு, அதிக நெருக்கடி இருந்திருந்தால், கடந்த ஐ.பி.எல்., தொடரில், என்னால் எப்படி ஐந்து அரை சதங்களை அடித்திருக்க முடியும். தவிர, கடந்த தொடரில், டில்லி அணி சார்பில் (495) அதிக ரன்கள் எடுத்தேன். 


சரியான வாய்ப்பு

இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சிறப்பான வீரர். இவர் தொடரிலிருந்து விலகியதன் மூலம், இவரின் பங்களிப்பை இழக்கிறோம். இருப்பினும், இவரது இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவர். தவிர, தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அணியின் வெற்றிக்கு உதவலாம். 

உதாரணமாக, கடந்த தொடரின் பைனலில், பிஸ்லாவின் அதிரடி ஆட்டத்தால், கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைப்போல, இம்முறை டில்லி அணிக்காக யாராவது வெற்றி தேடித் தருவார்கள் என நம்புகிறேன். 

ஒவ்வொரு அணியும், சமமான திறமைகளை கொண்டுள்ளது. ஆனால், வெற்றி பெறுவது என்பது, குறிப்பிட்ட நாளில், அந்த அணியின் செயல்பாட்டை பொறுத்தே உள்ளது. 

நமது நாட்டில், விளையாட்டில் திறமையானவர்கள் அதிகம் உள்ளனர். இதனை, இவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். 

இவ்வாறு சேவக் கூறினார். 

சென்னை அணியில் மினி இந்தியா


கேப்டன் தோனி, அஷ்வின், ஜடேஜா, முரளி விஜய் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "மினி' இந்திய அணியாக காட்சி அளிக்கிறது.

 சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 4-0 என வென்றது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கேப்டன் தோனி, முரளி விஜய், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி தான்.

இத்தொடரில் இந்திய அணி கைப்பற்றிய 79 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில், 53 ஐ, அஷ்வின்-ஜடேஜா ஜோடி தான் பெற்றது. இதில் அஷ்வின் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகன் விருதை வென்றார். ஜடேஜா 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 


முரளி அபாரம்:

பேட்டிங்கில் அதிக ரன்கள் (2 சதம் உட்பட 430) எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் முரளி விஜய். சென்னை டெஸ்டில் 224 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய தொடரில் ஆதிக்கத்தை துவங்கி வைத்தவர் இந்திய அணி கேப்டன் தோனி (326 ரன்கள்). இந்த நால்வரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர். 


முதுகெலும்பு ரெய்னா:


அடுத்து, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணியின் முதுகெலும்பாக இருப்பவர் ரெய்னா. கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித்தரும் இவர், சென்னை அணியில் தான் உள்ளார்.

உள்ளூர் போட்டிகளின் "ரன் மெஷின்' என்றழைக்கப்படும் பத்ரிநாத்தும், இங்கு தான் உள்ளார். இவர், சென்னை அணியின் "மிடில் ஆர்டரை' பலப்படுத்துவார். விக்கெட் கீப்பராக விரிதிமன் சகாவும் கூடுதலாக இணைந்துள்ளார்.


"பாபா' சக்தி:

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல உதவியவர் பாபா அபராஜித். இந்திய அணியின் சிறந்த "ஆல்-ரவுண்டராக' வளர்ந்து வரும் இவர், தமிழகத்துக்காக ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன், ஆறாவது தொடரில் அசத்த காத்திருக்கிறார். 

மொத்தத்தில், சென்னை அணியின் 11 வீரர்களில், 8 பேர் இந்திய அணியின் வீரர்களாக உள்ளனர். இதனையடுத்து, மஞ்சள் நிற உடையணிந்த இந்திய அணியாக மாறி உள்ளது.