புத்துயிர் தந்த புரட்சி கேப்டன்

தோனி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. இவர், கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. ஒருநாள் அரங்கில். இதுவரை 20 கோப்பைகள் வென்று,"சூப்பர்' கேப்டனாக ஜொலிக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.
இந்திய அணி ஒருநாள் அரங்கில் 1974ல் காலடி எடுத்து வைத்தது. துவக்கத்தில் பலவீனமாக கருதப்பட்ட இந்திய அணி, கபில்தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்களின் வருகைக்குப் பின் சற்று எழுச்சி பெற்றது. முதல் பத்தாண்டுகளில் பங்கேற்ற 21 ஒருநாள் தொடர்களில் 7ல் கோப்பை வென்றது. 

இந்த காலத்தில் தான், இந்திய அணிக்கு கபில்தேவ் முதன் முறையாக உலக கோப்பை (1983) பெற்றுத் தந்தார். 1984-85 முதல் 2000 வரையிலான காலத்தில், இந்திய அணிக்கு சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்களின் வரவு காரணமாக, மொத்தம் 85 தொடர்களில் பங்கேற்று, 31ல் கோப்பை வெல்ல முடிந்தது. ஆனாலும், உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சாதிக்க முடியவில்லை. 

கடந்த 2007ல் சீனியர்கள் அடங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இதன் பின், ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பு தோனியிடம் தரப்பட்டது. இவர் தலைமைக்கு முதல் சோதனை, சொந்தமண்ணில் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-4 என இழந்தது. 

இருப்பினும், அடுத்தடுத்த தொடர்களில் எழுச்சி பெற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் (2007-08) நடந்த முத்தரப்பு தொடரில், தோனியின் இந்திய அணி முதன் முறையாக கோப்பை வென்றது. 

கடைசி நேரத்தில் போட்டியை முடித்து தரும் "பினிஷிங்' மன்னனாக தோனி மிரட்டினார். 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான பைனலில், இவரது 91 ரன்கள் கைகொடுக்க, 28 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை கிடைத்தது. 

இந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி கோப்பை வென்றது. கடந்த 2008 முதல் 2009 வரை, 2012 முதல் இப்போது வரை என, தொடர்ச்சியாக இரு முறை தலா 6 கோப்பைகள் வெல்ல காரணமாக அமைந்தார். 

அதாவது, 1974 முதல் 2007 வரை என, இந்திய அணி பங்கேற்ற 154 ஒருநாள் தொடர்களில், பல்வேறு கேப்டன்கள் 53 கோப்பை வென்றனர். தோனி வந்த பின் பங்கேற்ற 37 தொடர்களில், இந்திய அணி 24ல் கோப்பை வென்றது. 

இதில் தோனி கேப்டனாக இருந்த 33 தொடர்களில், 20 முறை சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, தோனி தலைமையில் பங்கேற்ற 152 போட்டிகளில், 88 வெற்றிகள் கிடைத்துள்ளது. 

ஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (859 புள்ளி) முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

இவர், சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காதது பின்னடைவுக்கு காரணம். கேப்டன் தோனி 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சோபிக்காத இந்தியாவின் ஷிகர் தவான் (10வது இடம்), ரோகித் சர்மா (18வது), சுரேஷ் ரெய்னா (23வது) ஆகியோரும் பின்னடைவை சந்தித்தனர்.


டிவிலியர்ஸ் முன்னேற்றம்:

இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 189 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், 872 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். 

ஏற்கனவே இவர், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் "நம்பர்-1' இடத்தில் உள்ளார். இதன்மூலம் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் முதலிடம் வகிக்கும் 9வது வீரர் என்ற பெருமை பெற்றார். 

தென் ஆப்ரிக்கா சார்பில் காலிஸ், ஆம்லாவுக்கு பின் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரரானார். தவிர இவர், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்து சாதித்த, இளம் தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக், 61 இடங்கள் முன்னேறி, 14வது இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் டுமினி (24வது இடம்), டேவிட் மில்லர் (45வது), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (71வது) ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.


ஜடேஜா பின்னடைவு:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (7வது இடம்), அஷ்வின் (17வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மூன்று இடங்கள் முன்னேறி, 2வது இடம் பிடித்தார். 

பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (8வது இடம்), மார்னே மார்கல் (9வது) ஆகியோர் "டாப்-10' வரிசையில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் மெக்லாரன், முதன்முறையாக 20வது இடத்துக்கு முன்னேறினார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வேகத்தில் அசத்திய இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 9 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 7 இடங்கள் முன்னேறிய ஷமி, 43வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 16 இடங்கள் முன்னேறி 51வது இடம் பிடித்தார்.


இந்தியா "நம்பர்-1'

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. 

அடுத்த மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (111), இலங்கை (110) அணிகள் உள்ளன. மூன்று ரேங்கிங் புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் ஆப்ரிக்க அணி 110 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது. 

அடுத்த இரண்டு இடங்களில் பாகிஸ்தான் (100 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (90) அணிகள் உள்ளன.

மழையால் தப்பியது இந்தியா

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதனையடுத்து இந்திய அணி "ஹாட்ரிக்' தோல்வியில் இருந்து தப்பியது. 
அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் சதம் அடித்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி கோப்பை வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இதில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா களமிறங்கியது.


ஸ்டைன் இல்லை:

தென் ஆப்ரிக்க அணியில் ஸ்டைன், மார்னே மார்கல், காலிசிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், பார்னல், இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டு யுவராஜ் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' சரிவு:

கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா (13), இம்முறை முகமது ஷமி பந்தில் அவுட்டானார். இஷாந்த் சர்மா "வேகத்தில்' ஹென்றி டேவிட்ஸ் (1), டுமினி (0) வெளியேறினர். இதையடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


குயின்டன் அபாரம்:

பின் இணைந்த குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் ஜோடி அசத்தியது. மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சை பதம்பார்த்தார் குயின்டன். இவர், உமேஷ் யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் கோஹ்லி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். 

தொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் தனது "ஹாட்ரிக்' சதத்தை பதிவு செய்தார். இது, ஒருநாள் போட்டியில் இவரது 4வது சதம். நான்காவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த போது, 120 பந்தில் 101 ரன்கள் (2 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த குயின்டன், இஷாந்த் பந்தில் போல்டானார்.


டிவிலியர்ஸ் அதிரடி:

மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். முகமது ஷமி வீசிய 37வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். 

அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டிவிலியர்ஸ் 101 பந்தில் 109 ரன்கள் (5 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்த போது உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார்.


மில்லர் அரைசதம்:

அடுத்து வந்த மெக்லாரன் (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவிட் மில்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். முகமது ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், ஒருநாள் போட்டியில் தனது 6வது அரைசதம் அடித்தார். முகமது ஷமியிடம் பார்னல் (9), பிலாண்டர் (0) சரணடைந்தனர்.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. மில்லர் (56), டிசாட்சொபே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


மழை குறுக்கீடு:

பின், மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் வென்றார்.

அடுத்து இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 18ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், டர்பனில் வரும் டிச., 26ல் ஆரம்பமாகிறது.


இஷாந்த் "100'

நேற்று "வேகத்தில்' அசத்தி 4 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஒருநாள் போட்டியில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 16வது இந்திய பவுலரானார்.

* இதுவரை இவர், 70 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இவர், குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய பவுலரானார். முன்னதாக இந்தியாவின் இர்பான் பதான் (59 போட்டி), ஜாகிர் கான் (65), அஜித் அகார்கர் (67), ஜவகல் ஸ்ரீநாத் (68) ஆகியோர் இச்சாதனை படைத்தனர்.


300

நடப்பு ஆண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி 10வது முறையாக 300 அல்லது அதற்கு மேல் ரன்களை வாரி வழங்கியது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமுறை இப்படி ரன்கள் கொடுத்த அணிகள் வரிசையில், முதலிடம் பெற்றது. இதற்கு முன், இந்திய அணி 2009ல் 9 முறை, 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுத்தது.


பீல்டிங் சொதப்பல்

நேற்று இந்திய அணியின் "பீல்டிங்' சொதப்பலாக இருந்தது. குயின்டன் டி காக், ரன் எதுவும் எடுக்காமல் இருந்த போது கிடைத்த "ரன்-அவுட்' வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டைவிட்டார். பின், 37 ரன்கள் எடுத்திருந்த போது, உமேஷ் யாதவ் பந்தில் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை ரகானே கோட்டைவிட்டார். 

அடுத்து இவர் 43 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் பந்தில் கொடுத்த "கேட்ச்' 
வாய்ப்பை யுவராஜ் சிங் நழுவவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட குயின்டன் டி காக், "ஹாட்ரிக்' சதம் அடித்து அசத்தினார்.


"ஹாட்ரிக்' சதம்

நேற்று 101 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஒருநாள் போட்டியில் "ஹாட்ரிக்' சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரரானார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

* இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முன்னதாக பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ் இம்மைல்கல்லை எட்டினார்.

ஹாக்கி - இந்தியா அவுட்

ஜூனியர் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் கொரியாவுடன் "டிரா' செய்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 10வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர், டில்லியில் நடக்கிறது. "சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றது. அடுத்து கனடாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது. 

இதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, 3 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, ராமன்தீப் வீணடித்தார்.

தொடர்ந்து இந்திய வீரர்கள் செய்த தவறுகளால், 16வது நிமிடம் தென் கொரிய அணிக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் லீ ஒரு கோல் அடிக்க, 0-1 என இந்திய அணி பின்தங்கியது. 

பின், 33வது நிமிடம் கிடைத்த "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் கோலாக மாற்ற இந்திய அணிக்கு சற்று நிம்மதி கிடைத்தது. அடுத்த சில நிமிடத்தில் (35வது), "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-1 என, முன்னிலை பெற்றது.


திடீர் திருப்பம்:

இரண்டாவது பாதியில் மன்தீப் ஒரு "பீல்டு' கோல் அடிக்க, 3-1 என, வ<லுவான முன்னிலை பெற்றது. இருப்பினும், கடைசி நேரத்தில் எதிரணியை கோல் அடிக்க விட்டு ஏமாறுவதை வழக்கமாக கொண்ட இந்திய வீரர்கள், நேற்றும் சொதப்பினர். 

இதைப் பயன்படுத்திய தென் கொரிய வீரர் சீயுங்ஜு, 58, 60 வது நிமிடங்களில் , இரண்டு கோல்கள் அடிக்க, இந்திய அணியின் காலிறுதி கனது தகர்ந்தது. முடிவில், போட்டி 3-3 என்ற கணக்கில் "டிரா' ஆனது. 


இந்தியா "அவுட்';

"சி' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்ற போதும், இத்தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில், இரண்டாவது இடம் பெற்ற தென் கொரிய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 9 முதல் 12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி, நாளை அர்ஜென்டினாவை சந்திக்கிறது.

தடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ்

சமீபத்திய தோல்விகளுக்கு "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி புகார் கூறினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது.

இதற்கு அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற பேட்டிங்கும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ரன்கள் (2 அரை சதம்) தான் எடுத்துள்ளார். சராசரி 19.71 ரன்கள். தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் 211 ரன்கள் (23.44) எடுத்தார்.

ரெய்னா இவரைவிட பரவாயில்லை. கடைசியாக விளையாடிய 33 போட்டிகளில் 770 ரன்கள் (சராசரி 35.00) அடித்துள்ளார். தொடர்ந்து "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறுகிறார். 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

கடந்த சில தொடர்களாக "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இது அணிக்கு நெருக்கடியாக அமைகிறது. சமீபத்திய போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி வந்த "டாப் ஆர்டர்' வீரர்கள், தென் ஆப்ரிக்க தொடரில் விரைவில் அவுட்டாகினர். 

"மிடில் ஆர்டர்' பலவீனமும் நன்கு வெளிப்பட்டது. இந்த வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. 

டர்பன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்தது. இந்நிலையில், சரியான முறையில் பந்துகளை தேர்வு செய்து அடிக்காமல், கோட்டை விட்டது தான் ஏமாற்றத்துக்கு காரணம். 


ஷமி அபாரம்:

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜோகனஸ்பர்க் போட்டியை விட, டர்பனில் முகமது ஷமி நன்கு பந்துவீசினார். பந்தை "சுவிங்' செய்வது, சரியான அளவில் வீசுவது என, இங்குள்ள சூழலுக்கு ஏற்ப செயல்பட்டார்.


எல்லாம் சகஜம்:

வெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க செல்லும் போதெல்லாம், "ஷார்ட் பிட்ச்' பந்தில் திணறுவது குறித்து பேசுகின்றனர். ஏனெனில், துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த முறையில் அதிகம் பந்துவீசுவதில்லை. 

மொத்தத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கலாம். இதில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம். முதல் போட்டியில் பவுலிங் சரியில்லை. அடுத்த முறை பேட்டிங்கில் ஏமாற்றம் கிடைத்தது. அடுத்த போட்டியில் வெற்றிக்கு முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி கூறினார்.