கிரிக்கெட்டை அழிக்கும் கிரிக்கெட்




இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில்லாமல் போட்டிகளில் விளையாடுவதால், வீழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை. வெளிநாடு மற்றும் சொந்தமண் என்ற பாகுபாடு இல்லாமல் தோல்வியடைந்து வருகிறது. 

அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வர, இந்திய கிரிக்கெட் போர்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கடந்த 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பை வென்றது. இதன் பின் வெஸ்ட் இண்டீசில் வெற்றி கிடைத்தது. அப்படியே இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் (4), ஒருநாள் (4), ஒரு "டுவென்டி-20' என, பங்கேற்ற 9 போட்டிகளிலும் தோற்று "மரண அடி' வாங்கியது. 

இதற்கு பதிலடியாக இந்தியா வந்த இங்கிலாந்து அணியை, 5 ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது இந்திய அணி. பின், சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என "சாதா' அணிகளை சாய்த்தது. இத்துடன் இந்திய அணியின் வெற்றி முடிந்து போனது.

அடுத்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் (0-4), முத்தரப்பு தொடர், ஆசிய கோப்பை, "டுவென்டி-20' உலக கோப்பை, சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்(1-2), பாகிஸ்தானிடம் ஒருநாள் தொடர்களில்(0-2) தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானுடனான "டுவென்டி-20' தொடர்களை மட்டும் "டிரா' (1-1) செய்தது. 

அணியில் பிளவு:

கேப்டன் பதவியை குறிவைத்து, வீரர்களுக்கு இடையே மோதல், யார் பெரியவர் என்ற பிரச்னை தான் அணியின் வெற்றியை அதிகமாக பாதிக்கிறது. கேப்டன் தோனி-காம்பிர் மோதல் குறித்து சமீபத்தில் கூட செய்தி வெளியானது. 

பயிற்சியாளரை வெளியேற்று:

பயிற்சியாளராக பிளட்சர் பதவி ஏற்றதில் இருந்தே, இந்திய அணியின் மூக்கு உடைந்து தான் வருகிறது. வலைப்பயிற்சி செய்யும் இடம், "டிரசிங் ரூம்' என, எந்த இடத்திலும் இவருக்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை. இவரை முதலில் வெளியேற்ற வேண்டும்.

 தோனிக்கு "பிரேக்':

மூன்று வித போட்டிகளிலும் கேப்டனாக இருக்கும் தோனியை, குறைந்தபட்சம் டெஸ்டில் இருந்தாவது விடுவிக்க வேண்டும். முந்தைய தேர்வாளர்கள் எதிர்த்த போதும், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் ஆதரவில் தோனி நீடிக்கிறார்.

 இளமைக்கு முன்னுரிமை:

மனோஜ் திவாரி, ரகானே போன்றவர்கள் அணி செல்லுமிடம் எல்லாம் செல்கின்றனர். ஆனால், விளையாடும் லெவனில் மட்டும் வாய்ப்பு வரவில்லை. இவர்களுடன் புஜாராவையும் சேர்த்து எதிர்கால இந்திய அணியை பலப்படுத்தலாம். ஜாகிர் சென்ற பின், இஷாந்த் செயல்பாடு திருப்தியில்லை. உமேஷ் யாதவை பவுலிங் பிரிவுக்கு தலைமையேற்க சொல்லலாம்.

"சுழலில்' கவனம்:

இந்திய அணியின் பலம் சுழற்பந்து வீச்சு தான். கும்ளே ஓய்வுக்குப் பின் இப்போது பெரும் ஆபத்து வந்துள்ளது. இங்கிலாந்து தொடரில் அஷ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங் என மூவரும் திணறினர். சுழற்பந்து வீச்சு பிரிவில் கவனம் செலுத்தி, திறமையான வீரர்களை கொண்டு வர வேண்டும்.

ஓயாத போட்டிகள்

 அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால், இந்தியாவில் கிரிக்கெட் அழித்துவிடும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால் தான் பவுலர்களுக்கு காயம் ஏற்படுகிறது. பேட்ஸ்மேன்களும் மனதளவில் சோர்ந்து விடுவதால், களத்தில் போராடாமல் சரணடைகின்றனர். 

 எதிர்காலம் முக்கியம்:

வரும் ஜூனில் சாம்பியன்ஸ் டிராபி, 2015ல் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் வருகிறது. "நடப்பு சாம்பியன்' இந்திய அணியின் நலனுக்காக, "விளையாடாத' சீனியர்களான சேவக், காம்பிர் போன்றவர்களை எவ்வித தயக்கமும் இன்றி நீக்க வேண்டும். இளம் ரத்தங்களை சேர்க்க இது தான் சரியான தருணம்.

களத்தில் 200 நாட்கள்...

 கடந்த 2011, நவம்பர் முதல், 2013, ஜன., 4 வரை (15 மாதம்) இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட "டாப்-8' அணிகள் பங்கேற்ற போட்டிகள் ("டுவென்டி-20' உலக கோப்பை தொடர் உட்பட) விவரம்:

அணி டெஸ்ட் ஒருநாள் "டுவென்டி-20' மொத்த நாட்கள்
 ஆஸ்திரேலியா 16 26 15 121
இங்கிலாந்து 15 22 15 112
இந்தியா 13 28 15 108
 இலங்கை 12 36 12 108
தென் ஆப்ரிக்கா 14 16 17 103
பாகிஸ்தான் 11 26 18 99
நியூசிலாந்து 11 19 20 94
வெஸ்ட் இண்டீஸ் 11 26 11 92

* இதில் இந்திய வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.பி.எல்., (60 நாட்கள்) மற்றும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' (15 நாட்கள்) சேர்த்து சுமார் 200 நாட்கள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' போட்டிகளுக்கு முற்றிலும் வெவ்வேறு அணிகளை அனுப்பும். 

* இந்தியாவில் மட்டும் தான்,தோனி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் நிலை உள்ளது.

மோசமான நிலையில் இந்திய அணி


டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்த இந்திய அணி தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததுதான் வேதனை தருகிறது.

சொந்தமண்ணில் இந்த இரண்டு தொடர்களையும் இழந்ததற்கு மோசமான பேட்டிங்தான் காரணம். டிராவிட், லட்சுமணன் ஓய்வால் இந்திய டெஸ்ட் அணி ஆட்டம் கண்டுவிட்டது.

இந்த இருவருமே நிலைத்து நின்று ஆடுவதில் வல்லவர்கள். அவர்களுக்குரிய இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. டிராவிட், லட்சுமணன் போல விளையாடக்கூடிய வீரர்கள் இல்லாததால் இங்கிலாந்துக்கு எதிராக 23 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது.

டெஸ்டில்தான் இந்திய வீரர்களின் ஆட்டம் மோசமாக இருக்கிறது என்று பார்த்தால் ஒருநாள் போட்டியிலும் பேட்டிங் சொதப்பலாகவே இருக்கிறது. காம்பீர், ஷேவாக், வீராட் கோலி, யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் யாருமே சரியாக விளையாடாததால் சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் ஒரு நாள் தொடரை இழந்ததது.

பலவீனமான இந்திய பந்து வீச்சை ஈடு செய்யும் வகையில் பலமான பேட்டிங் இருந்து வந்தது. தற்போது பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடுவதால் இந்திய அணியால் தோல்வியில் இருந்து மீள இயலவில்லை.

கடந்த ஆண்டு உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அப்போது புகழின் உச்சத்தில் இருந்த இந்திய அணி தொடர் தோல்வியால் படப்படியாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி சிறப்பான வெற்றி எதையும் பெறவில்லை. ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் எடுபடவில்லை.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் அனைத்து டெஸ்டிலும் தோற்றது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறையும் மட்டும் டெஸ்ட் தொடரை வென்றது.

மோசமான நிலையில் இருக்கும் இந்திய அணி எழுச்சி பெறுவது அவசியமானது. தேர்வு குழுவினர் அணியை அதிரடியாக மாற்றங்களை செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கோல்கட்டாவிலும் சொதப்பல் - தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்




சென்னையை தொடர்ந்து கோல்கட்டா ஒரு நாள் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை 2;0 என்ற கணக்கில் வென்றது. 

இந்த அணி சார்பில் சிறப்பாக பேட் செய்த நசிர் ஜாம்ஷத் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று கோல்கட்டாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இடம்பிடித்தார்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு நசிர் ஜாம்ஷத், முகமது ஹபீஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. பவுண்டரிகளாக விளாசிய இந்த ஜோடி ரன் விகிதம் ஆறுக்கு குறையாமல் பார்த்து கொண்டது. 

முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹபீஸ் அவுட்டானார். 74 பந்தில் 76 ரன்கள் விளாசிய இவர் ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து வந்த அசார் அலி (2), யூனிஸ் கான் (10), மிஸ்பா உல் ஹாக் (2) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற பாகிஸ்தானின் ரன் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்தது. 

இந்தியா உடனான போட்டிகளிலும் எப்போதும் சிறப்பாக பேட் செய்யும் சோயப் மாலிக் 24 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் வரிசையாக விழுந்தாலும் மறுபக்கம் சிறப்பாக பேட் செய்த ஜாம்ஷத் சென்னையை தொடர்ந்து கோல்கட்டாவிலும் சதம் விளாசினார். 

அவர் 2 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ஒரு கட்டத்தில் 300 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி 48.3 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கம்பீர் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து விராத் கோஹ்லி 6, சேவாக் 31, யுவராஜ் 9 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி தடுமாற துவங்கியது. 

இதையடுத்து சென்னையில் இந்திய அணியின் மானத்தை காத்த தோனி - ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணிக்கு வெற்றி தேடித் தரும் என எதிர்பார்த்த நிலையில் ரெய்னா 18 ரன்களுக்கு ஹபீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். 

இந்திய அணி நூறு ரன்களை எட்டும் முன்னதாக டாப்-5 வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தோனி 54 ரன் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார். இந்திய அணி 48 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் ஒருநாள் தொ‌டரை 2 க்கு 0 ‌என்ற கணக்கில் வென்றது. 

பாகிஸ்தான் அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஒவர் போட்டித்தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. 

3 ஒருநாள் போட்டித் தொடரில் கடந்த 30-ந்தேதி சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் இந்திய அணிக்கு உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும். 

சென்னையில் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம். கேப்டன் டோனி, ரெய்னா தவிர முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாகவே விளையாடினார்கள். 

7 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டது தான் ஏமாற்றம் அளிக்கிறது. காயம் அடைந்துள்ள வீராட் கோலி முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவது உறுதியில்லை. அவரது உடல் தகுதி பற்றி இன்று முடிவு தெரியவரும். வீராட் கோலி இடம் பெறாத பட்சத்தில் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

ஒரு வேளை வீராட் கோலி ஆடும் பட்சத்தில் ஜடேஜாவுக்காக ரோகித் சர்மா கழற்றி விடப்படலாம். 2-வது முதன்மை சுழற்பந்து வீரரான அமித் மிஸ்ரா தேவைப்பட்டால் வேகப்பந்து வீரர்களில் ஒருவர் நீக்கப்படலாம். 

அசோக் திண்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் வேகப்பந்தில் உள்ளனர். ஷேவாக்- காம்பீர் ஜோடி தொடக்கம் சமீப காலமாக அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதனால் இருவரும் சிறந்த அடித்தளத்தை அமைத்து தருவது அவசியமாகும். 

நாளைய முக்கியமான ஆட்டத்தில் இருவரும் சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க வேண்டும். இதேபோல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். 

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானது. பாகிஸ்தான் அணி நாளைய ஆட்டத்தில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. 

பாகிஸ்தான் அணி 2005-ம் ஆண்டு 6 போட்டித்கொண்ட ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. பாகிஸ்தான் அணியின் பலமே வேகப்பந்து வீச்சுதான். 

முகமது இர்பான், ஜுனைத்கான், உமர்குல் ஆகிய வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். பேட்டிங்கில் நாசிர் ஜாம்ஷெட், முன்னாள் கேப்டன்கள் யூனுஸ்கான், சோயிப்மாலிக் நல்ல நிலையில் உள்ளனர். 

இரு அணி வீரர்கள் வருமாறு:- 

இந்தியா:- டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, யுவராஜ்சிங்,  ரோகித்சர்மா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், இஷாந்த்சர்மா, அசோக் திண்டா, ரவிந்திர ஜடேஜா, ரகானே, அமித் மிஸ்ரா, ஷமி அகமது. 

பாகிஸ்தான்:- மிஸ்பா-உல்- ஹக் (கேப்டன்), ஹபீஸ், நாசிர் ஜாம்ஷெட், அசார் அலி, யூனுஸ்கான், சோயிப் மாலிக், கமரன் அக்மல், ஜுனைத்கான், உமர்குல், அஜ்மல், முகமது இர்பான்.

கோல்கட்டாவில் விளையாடுவாரா கோஹ்லி?


சென்னை போட்டியில் காயமடைந்த விராத் கோஹ்லி, கோல்கட்டா ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. 

இப்போட்டியின் போது, பவுலிங் செய்த இந்திய வீரர் விராத் கோஹ்லி, 24, கால் வழுக்கி கீழே விழுந்தார். முழங்காலில் பலமாக அடிபட, மைதானத்தை விட்டு வெளியேறிய இவர், மறுபடியும் "பீல்டிங்' செய்ய வரவில்லை. 

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கோல்கட்டாவில் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதில் விராத் கோஹ்லி விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இவரது காயத்துக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்பட்டு, அதன் முடிவு வெளியான பிறகு தான், விராத் கோஹ்லி பங்கேற்பது குறித்து தெரியவரும்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் ஜக்தலே வெளியிட்ட அறிக்கையில்," விராத் கோஹ்லியின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவரது கால் முக்கிய சதை நார்கள், எவ்வித சேதமும் அடையவில்லை. 

முழங்காலில் உள்ள திரவத்தில் தான் பிரச்னை ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அதுவும் சரியாகி விட்டது. கோல்கட்டா ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்த முடிவு, விரைவில் எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க இரு அணி வீரர்களும், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று கோல்கட்டா சென்றனர். பாகிஸ்தான் அணியின் முகமது சமி, முகமது இர்பான், சோயப் மாலிக் உள்ளிட்டோர் தனியார் ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

இந்திய அணியின் கேப்டன் தோனி, ஜடேஜா, அசோக் டிண்டா, பயிற்சியாளர் பிளட்சர் மட்டும் இங்கு வந்தனர். மற்ற வீரர்கள், இன்று வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணியினரும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால், இது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மேற்குவங்க கிரிக்கெட் சங்க பொருளாளர் பிஸ்வருப் கூறுகையில்,""இரு அணியினரும் இணைந்து புத்தாண்டை கொண்டாட முடிவு செய்திருந்தனர். இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் தங்களது வீட்டுக்கு சென்று புத்தாண்டை கொண்டாட உள்ளனர். 

பிரதமர் மன்மோகன் சிங்கை, போட்டியைக் காண அழைப்பு விடுக்க இருந்தோம். டில்லி மாணவி மரண சம்பவத்தால், அவர் வர விரும்பவில்லை. கபில்தேவ், வெங்சர்க்கார் உள்ளிட்ட முன்னாள் வீரர்களை அழைத்து கவுரவிக்க உள்ளோம்,''என்றார்.