கண்ணில் பெயில்ஸ் தாக்கிய பரிதாபம்

பயிற்சி போட்டியில் பறந்து வந்த "பெயில்ஸ்' தென் ஆப்ரிக்க வீரர் மார்க் பவுச்சரின் இடது கண்ணில் பலமாக தாக்கியது. ரத்தம் கொட்டிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மூன்று மணி நேரம் "ஆப்பரேஷன்' நடந்தது.

பார்வைக்கு பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிகுந்த சோகத்துடன் ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன், உள்ளூர் அணியான சாமர்சட் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.


துரத்திய துரதிருஷ்டம்:

டான்டன் நகரில் நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் வீசிய பந்தில், சாமர்சட் அணியின் ஜிமால் ஹுசைன் "கிளீன்' போல்டானார். அப்போது பறந்து வந்த "பெயில்ஸ்', துரதிருஷ்டவசமாக கீப்பராக செயல்பட்ட பவுச்சரின் இடது கண்ணின் வெள்ளைப் பகுதியில் பலமாக தாக்கியது.

மைதானத்தில் சுருண்டு விழுந்த இவரது கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது. . பின் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்கு, மூன்று மணி நேரம் "ஆப்பரேஷன்' நடந்தது. பார்வைக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பவுச்சரின் வாழ்க்கையில் பணம், புகழ் என அனைத்தையும் கொடுத்தது கிரிக்கெட் தான். இன்றைக்கு அதே கிரிக்கெட் அனைத்தையும் பறித்துக் கொள்ள, நேற்று திடீரென ஓய்வை அறிவித்தார்.


சாதனை வீரர்:

கடந்த 1997ல் முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த பவுச்சர் மிகச் சிறந்த கீப்பர், பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். இக்கட்டான நேரத்தில் அணியை பல முறை கரை சேர்த்துள்ளார். 147 டெஸ்ட் (532 கேட்ச், 23 ஸ்டெம்பிங்), 295 ஒருநாள் (403 கேட்ச், 22 ஸ்டெம்பிங்) மற்றும் 25 சர்வதேச "டுவென்டி-20' (18 கேட்ச், ஒரு ஸ்டெம்பிங்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம், தனது 150வது டெஸ்டில் விளையாடும் கனவுடன் வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பை இழந்தார். இவர், சர்வதேச போட்டிகளில் 999 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கினார். இதில் டெஸ்டில் மட்டும் 555 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கிய முதலாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். தவிர இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

ஓய்வு குறித்து பவுச்சர் கூறியது: கண்ணில் ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் தேவைப்படும். இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளதால், ஓய்வு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மிகுந்த வருத்தத்துடனும், மன வேதனையுடனும் வெளியிடுகிறேன்.

கடந்த 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் எனது வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்ணில் காயம் ஏற்பட்டவுடன், முகம் தெரியாத நிறைய நண்பர்கள் உதவி செய்ய முன்வந்து ஆறுதல் தந்தனர். அவர்களது ஆசிர்வாதம், விரைவில் குணமடைய உதவும் என நம்புகிறேன்.
இவ்வாறு மார்க் பவுச்சர் கூறினார்.


ஸ்மித் வருத்தம்

பவுச்சரின் ஓய்வு முடிவு குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் வருத்தத்துடன் கூறுகையில், ""பவுச்சருக்கு ஏற்பட்ட காயம், ஓய்வு முடிவு தென் ஆப்ரிக்க அணிக்கு துரதிர்ஷ்டவசமான ஒன்று. இவரது இடத்தை பூர்த்தி செய்வது கடினம். கடந்த 15 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 100 சதவீத உழைப்பை அளித்துள்ளார்.

அணியின் வெற்றிக்காக போராடும் குணமுடைய இவர், இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். இவர், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம். இவரது எதிர்கால வாழ்க்கை சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்,'' என்றார்.


பதம் பார்த்த பந்து

கிரிக்கெட்டில் பந்து தாக்கியதில் சிலர் மரணமடைந்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த ராமன் லாம்பாவும் ஒருவர். வங்கதேச தலைநகர் தாகாவில் 1998ல் நடந்த உள்ளூர் போட்டியில், லாம்பா "பார்வார்ட் ஷார்ட் லெக்' திசையில் "பீல்டிங்' செய்தார். அப்போது மெஹராப் ஹொசைன் அடித்த பந்து இவரது நெற்றியில் பலமாக தாக்கியது. சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

* கடந்த 2000ல் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியின் போது அனில் கும்ளே வீசிய பந்து, இந்திய விக்கெட் கீப்பர் சபா கரீம் வலது கண்ணில் தாக்கியது. பார்வை இழப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

* கராச்சியில் 1959ல் நடந்த உள்ளூர் போட்டியில், பாகிஸ்தானின் அப்துல் அஜிஸ், தில்த்வார் அவான் பந்தை எதிர்கொண்டார். பந்து மார்பு பகுதியில் தாக்கியதால், அஜிஸ் மரணமடைந்தார்.

* கடந்த 1993ல் உள்ளூர் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் இயான் போலேவின் கண் பகுதிக்கு கீழே பந்து தாக்கியதால், சுருண்டு விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட இவருக்கு, மயக்கமருந்து கொடுக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

சர்ச்சையால் என்ன பயன் - சானியா மிர்சா புலம்பல்

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தினால், யாருக்கும் எந்த பலனும் இல்லை. தவிர, மகேஷ் பூபதியுடனான நட்பு தான் பாதிக்கப்படுகிறது,'' என, சானியா மிர்சா புலம்பியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் வீரர்கள் தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பயஸ்-விஷ்ணு வர்தன், பூபதி-போபண்ணா ஜோடி ஆண்கள் இரட்டையர் பங்கேற்பர் என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது. தவிர, கலப்பு இரட்டையரில் பயசுடன் தான் சானியா மிர்சா விளையாட வேண்டும் என, அறிவித்தது.

இதுகுறித்து சானியா மிர்சா கூறியது:

வீரர்கள் தேர்வில் ஏற்பட்ட பிரச்னையால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இதனால் எங்களுக்கு இடையே மோதல் உருவானது தான் மிச்சம். இது துரதிருஷ்டவசமானது.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி, என்றாலும் இதை மறப்பது என்பது மிகவும் கடினம். ஏனெனில், இந்த விவகாரமே வந்திருக்கக் கூடாது.


யாருடனும் விளையாடுவேன்:

நானும், பூபதியும் நல்ல நண்பர்கள். நான் முன்களத்தில் விளையாடுபவள். பூபதி பின்களத்தில் விளையாடுபவர். எங்கள் ஜோடிக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். இப்போதைய பிரச்னையால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிட்டது.

அதேநேரம், இவருடன் தான் விளையாடுவேன், இவருடன் விளையாட முடியாது என, ஒருபோதும் நான் கூறியதில்லை. நாட்டுக்காக யாருடனும் விளையாடுவேன்.


பெருமையாக உள்ளது:

தற்போது பயசுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. போட்டியின் மீது கவனம் செலுத்தி, பதக்கம் வெல்ல முயற்சிப்பது தான் முதல் இலக்கு. விம்பிள்டனில் பயஸ் கலப்பு இரட்டையரில் பைனலுக்கு முன்னேறியது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

நானும், பூபதியும் முதலில் தோற்று வெளியேறியது ஏமாற்றம் தான். நாங்கள் பைனலுக்கு சென்றிருக்க வேண்டும். காமன்வெல்த், ஆசிய போட்டி, ஆசிய-ஆப்ரோ என, மொத்தம் 12 பதக்கங்கள் வென்றுள்ளேன்.

ஒலிம்பிக் பதக்கம் மட்டும் தான் வெல்ல வேண்டும். இம்முறை இதை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா?

கிரிக்கெட்டில் சாதனைகள் முறியடிக்கப்படுவது சகஜம். சச்சின் சாதனையையும் யாராவது ஒருவர் தகர்ப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்,''என, கபில்தேவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில் சர்வதேச அளவில் 100 சதம் அடித்து சாதித்தார். இதனை முறியடிப்பது மிகவும் கடினம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறியது:

கவாஸ்கர் 34வது டெஸ்ட் சதம் அடித்த போது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இவரைவிட சிறந்த பேட்ஸ்மேன் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு இல்லை என அப்போது நினைத்தோம்.

இவரது சத சாதனையை யாருமே எட்ட முடியாது என நம்பினோம். ஆனால், எங்களது கணிப்புகள் பொய்யாகின. கவாஸ்கரை காட்டிலும் சிறந்த வீரர்கள் உருவாகினர். இது, கிரிக்கெட் என்பது தனிப்பட்ட வீரரை காட்டிலும் மிகவும் பெரியது என்பதை உணர்த்தியது.

ஒரு கட்டத்தில் கவாஸ்கர் சாதனையை சச்சின் முறியடித்தார். ஆக, சாதனைகள் என்பது, முறியடிப்பதற்கு தான். சச்சினும் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதனை யாருமே முறியடிக்கவில்லை என்றால், அது மனித இனத்துக்கே பின்னடைவாக அமைந்து விடும். சச்சின் சாதனையை யாராவது ஒருவர் தகர்ப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.

வாழ்க்கையில் ஒருவர் வெற்றிபெற ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் முக்கியம். நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப் போகும் நேரத்தில், இருவர் பிரபலமடைந்தனர். ஒருவர் சச்சின். மற்றொருவர் வினோத் காம்ப்ளி. இவர்களை இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர்கள் என "மீடியா' புகழ்ந்தது.


காம்ப்ளி வீழ்ச்சி:

இதில், காம்ப்ளியிடம் ஒழுக்கம் இல்லை. எந்த பாதையில் சென்று சாதிக்கப் போகிறோம் என்ற திட்டமும் இல்லாததால், வீழ்ச்சியை சந்தித்தார். சில நேரங்களில் உங்களிடம் திறமை இருக்கலாம். ஆனால், உங்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவில்லை என்றால், சச்சினை போல சாதனை நாயகனாக உருவெடுக்க முடியாது. உங்களுக்கு என்று ஒரு "ரோல் மாடல்' இருக்க வேண்டும். அவரை மட்டுமே எல்லையாக வைத்துக் கொள்ளக்கூடாது. அவரையும் தாண்டி சாதிக்க வேண்டும்.
பெற்றோர் முக்கியம்:
குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். குழந்தைகளை நன்கு புரிந்து, அவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும். எனது மகள் தான் எனக்கு சிறந்த நண்பர். தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் என்னைவிட புத்திசாலியாக உள்ளார். அவரது கருத்துக்கு உரிய மதிப்பு அளிக்கிறேன்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

தோனி வெற்றிகரமான கேப்டன் - சேவக் அந்தர் பல்டி

செய்தியை பரபரப்பாக்க, நான் கூறியதை திரித்து வெளியிட்டு விட்டனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் தோனி,'' என, சேவக் திடீரென "பல்டி' அடித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே சமீபகாலமாக நல்லுறவு இல்லை. இதனிடையே, "" உலக கோப்பை வெல்ல தோனியின் தலைமை மட்டுமே காரணம் அல்ல, இவருக்கு வலுவான அணி கிடைத்திருந்தது.

எப்போது தரமான அணி கிடைக்கிறதோ, அப்போது வெற்றி பெறுவது எளிதாகி விடும். இந்திய அணி உலக கோப்பை வென்றதற்கு காரணம், திறமையான வீரர்கள் அணியில் இருந்தது தான்,'' என, தோனியை வம்புக்கு இழுத்திருந்தார் சேவக்.

விரைவில், இலங்கை தொடர் துவங்கவுள்ள நிலையில், சேவக்கின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. வீரர்கள் இடையே மீண்டும் பிளவு ஏற்பட்டதை, இது, வெளிப்படையாக காட்டியது.

தற்போது இந்த செய்தியை மறுத்துள்ளார் சேவக். தான் கூறியதை"மீடியா' திரித்து வெளியிட்டு விட்டதாக, "பல்டி' அடித்துள்ளார். இதுகுறித்து சேவக், தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:

செய்தியில் பரபரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, "மீடியா' எனது கருத்தை திரித்து வெளியிட்டது துரதிருஷ்டவசமானது. நான் என்ன சொன்னேன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். "நாங்கள் சிறந்த அணி.

அதனால் தான் தோனியின் தலைமையில் இரண்டு உலக கோப்பை வெல்ல முடிந்தது<,' இதுதான் நான் கூறியதன் சுருக்கம்.

தவிர, தோனி சிறந்த கேப்டன். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் இவரும் ஒருவர். எனது அறிக்கை இதைத் தவிர, வேறெதையும் உணர்த்துவதாக இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.
இவ்வாறு சேவக் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிடைத்தது யாரால்? - தோனி காலைவாரிய சேவக்

கேப்டன் தோனி, சேவக் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தோனியின் கேப்டன் திறமையால் மட்டும் உலக கோப்பை கிடைக்கவில்லை என வெளிப்படையாகவே சாடியுள்ளார் சேவக்.

இந்திய அணியின் கேப்டன் தோனி மற்றும் சேவக் இடையே நல்லுறவு இல்லை. சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் போது சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மந்தமாக "பீல்டிங்' செய்வதாக தோனி விமர்சித்தார்.

இதற்கு சேவக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒருகட்டத்தில் சேவக்கிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.


அணியில் பிளவு:

தற்போது மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள சேவக், உலக கோப்பை வெல்ல தோனியின் தலைமை மட்டுமே காரணம் அல்ல என கூறி புதிய பிரச்னை கிளப்பியுள்ளார்.

கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் தோனி வகுத்த சிறந்த வியூகங்களே சாம்பியன் பட்டம் வெல்ல வழிவகுத்தது. இதே போல 2011ல் நடந்த இலங்கைக்கு எதிரான உலக கோப்பை(50 ஓவர்) பைனலில் சேவக் "டக்' அவுட்டானார்.

ஆனால், தோனி 91 ரன்கள் விளாசி ஆட்ட நாயகனாக ஜொலித்ததோடு, சாம்பியன் கனவையும் நனவாக்கினார். இந்நிலையில் தோனியை வீணாக வம்புக்கு இழுத்துள்ள சேவக் அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து சேவக் கூறியது:

2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை, 2011ல் 50 ஓவர் உலக கோப்பையை தோனி தலைமையில் வென்றது இந்திய அணி. இதற்கு காரணம் தோனிக்கு வலுவான அணி கிடைத்திருந்தது. எப்போது தரமான அணி கிடைக்கிறதோ, அப்போது வெற்றி பெறுவது எளிதாகி விடும்.

ஆஸ்திரேலிய அணி கூட இப்படித்தான், ஒரு நேரத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இந்திய அணி உலக கோப்பை வென்றதற்கு காரணம், திறமையான வீரர்கள் அணியில் இருந்தது தான் காரணம். இதனால் தான் தோனியால் சாதிக்க முடிந்தது.


சச்சின் ஏமாற்றம்:

வரும் இலங்கை தொடரில் சச்சின் இல்லாதது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏமாற்றம் தான். அதேநேரம், அவருக்கு 39 வயதாகி விட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர் எந்த தொடரில் விளையாட விரும்புகிறாரோ, அதில் அனுமதிக்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கட்டாயம் இடம் பெறுவார்.


உடற்தகுதி பிரச்னையல்ல:

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் விளையாடினேன். இந்நிலையில், உடற் தகுதி என்பது ஒரு பிரச்னையே அல்ல. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர், வரும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு சரியான பயிற்சியாக அமையும்.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய "ஏ' அணியில் சிலர் நன்றாக செயல்பட்டனர். சிலர் ஏமாற்றினர். இத்தொடரில் செய்த தவறுகளில் இருந்து இளம் வீரர்கள் சரியான பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் சரிசெய்து, அடுத்து வரும் உள்ளூர் தொடர்களில் வலிமையான முறையில் மீண்டுவர முயற்சித்தால் நல்லது. '

இவ்வாறு சேவக் கூறினார்.