சென்னை போட்டிக்கு இலவச டிக்கெட்

சென்னை அணி பங்கேற்கும் போட்டியை இலவசமாக காண வாய்ப்பு காத்திருக்கிறது.

வரும் மே 2ம் தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 

இதனை மாணவர்கள் இலவசமாக காண, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ராஞ்சி மைதான வளாகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

இவற்றை பூர்த்தி செய்து, பள்ளி முதல்வரிடம் ஒப்புதலுடன், நாளை மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

பின் குலுக்கல் முறையில் 50 அதிர்ஷ்டசாலி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவருக்கும் 2 டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். உடன் ஒருவரை(பெற்றோர்/பாதுகாப்பாளர்) அழைத்துச் சென்று போட்டியை கண்டு களிக்கலாம்.

ஐ.பி.எல்., சூதாட்டம்: ஒன்பது பேர் கைது

ஐ.பி.எல்., லீக் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அபுதாபியில், கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி நடந்தது. 

அப்போது கோல்கட்டாவில் 9 பேர் கொண்ட குழு சூதாட்டத்தில் ஈடுபட்டது. இதனை கண்டறிந்த  போலீசார், ஒன்பது பேரையும் கைது செய்தனர். 

இதுகுறித்து கோல்கட்டா போலீஸ் இணை கமிஷனர் (குற்றம்) பி.கே. கோஷ் கூறுகையில், ‘‘ஐ.பி.எல்., போட்டி தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் கைது செய்தோம். 

ரூ. 67, 385 பணம், 11 மொபைல் போன், ‘டிவி’, ‘செட்டாப் பாக்ஸ்’ மற்றும் சூதாட்டம் தொடர்பான பேப்பர்களை பறிமுதல் செய்தோம்,’’ என்றார்.

வருத்தத்தில் சச்சின் - ஜான் ரைட்

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த வருத்தத்தில் சச்சின் உள்ளார்,’’என,  பயிற்சியாளர் ஜான் ரைட் தெரிவித்தார்.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி விளையாடுகிறது. கடந்த தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய டுவைன் ஸ்மித் (சென்னை), மேக்ஸ்வெல் (பஞ்சாப்), மிட்சல் ஜான்சன் (பஞ்சாப்), தினேஷ் கார்த்திக் (டில்லி) வேறு அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சினுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கிய மும்பை அணி நிர்வாகம், அணியின் ஆலோசகராக நியமித்தது. 

இம்முறை ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்து, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பெற்றது.

இதுகுறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியது: இம்முறை மும்பை அணிக்காக சச்சின் விளையாட மாட்டார் என அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கடந்த மூன்று போட்டியில் வீரர்கள் மோசமாக விளையாடினர். இது, சச்சினுக்கு கவலை அளித்துள்ளது. 

இம்முறை பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. பவுலிங் சிறப்பாக இருந்த போதிலும், அவர்களுக்கு அதிக அளவு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. பேட்ஸ்மேன்கள் இமாலய இலக்கை நிர்ணயிக்காமல், பவுலர்களிடம் அதிகம் எதிர்பார்க்க கூடாது. 

இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். பேட்டிங்கில் நிறைய மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக சில ‘ரிஸ்க்’ எடுக்க உள்ளோம்.

சென்னை அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசினார். இவரது கடைசி ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்ற முடிந்தது.

கடந்த முறை விளையாடிய வீரர்கள், இம்முறை வேறு அணிகளில் விளையாடுவது அணி நிர்வாகத்தின் முடிவு. தற்போதுள்ள வீரர்களை தயார் படுத்தி, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும். விரைவில் மும்பை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஜான் ரைட் கூறினார்.

மார்னே மார்கலை சந்தித்தது யார்? மீண்டும் வெடிக்குமா சூதாட்டம்

கோல்கட்டா, ராஜஸ்தான் வீரர்களை சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் சந்தித்து ‘பிக்சிங்’ செய்ய முயற்சித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் நடந்த ‘பிக்சிங்’, இந்திய கிரிக்கெட்டையே புரட்டி போட்டது.

இதனால், ஏழாவது தொடரை, பி.சி.சி.ஐ., மிகுந்த தீவிரமாக கண்காணித்து வருகிறது. முதல் கட்ட போட்டிகள் ‘பெட்டிங்’ உலகின் சொர்க்கபுரியான ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடப்பதால், ரவி சவானி தலைமையிலான, ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு (ஏ.சி.எஸ்.யு.,), 24 மணி நேரமும் சூதாட்டத்தை தடுக்க போராடி வருகிறது.

இதனிடையே, கோல்கட்டா வேகப்பந்து வீச்சாளர் மார்னே மார்கலை, சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் அணுகியதாக, ஏ.சி.எஸ்.யு.,விடம் தெரிவித்துள்ளார். 

தவிர, ராஜஸ்தான் அணி வீரர்கள் தங்கியுள்ள துபாய் ஓட்டலுக்குள், சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் நுழைந்து, வீரர்களை சந்திக்க முற்பட்டதாகவும் தெரிகிறது. 

இந்த இரண்டு சம்பவங்களும், கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்ததாம். இதையடுத்து, ஏ.சி.எஸ்.யு., குழு தலைவர் ரவி சவானி, விசாரணை அதிகாரி நிரஞ்சன் சிங் விர்க் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து நிரஞ்சன் சிங் விர்க் கூறுகையில்,‘‘ சில விஷயங்கள் மிகவும் ரகசியமானவை. இதுகுறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாது,’’ என்றார்.

IPL ஏழாவது கோப்பை யாருக்கு?

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாம்.

மும்பையை சேர்ந்தவர் பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ. விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து, இவர்கள் சாதிப்பதை கூறுவார்.

2011 உலக கோப்பை தொடரில் தோனி சாதிப்பார் என கணித்தார். ஐ.பி.எல்., தொடரில் 2012ல் காம்பிரின் கோல்கட்டா, 2013ல் ரோகித் சர்மாவின் மும்பை அணி கோப்பை வெல்லும் என்று சொன்னது நடந்தது.

இம்முறை ஏழாவது தொடர் துவங்கி, சில நாட்கள் தான் ஆகியுள்ளன. இந்நிலையில், இத்தொடர் குறித்து லோபோவின் கணிப்பு:

கோல்கட்டா, சென்னை, மும்பை அணிகளுக்கு இம்முறை கோப்பை கிடையாது. அதாவது தோனியின் அசாதாரணமான ஜாதக பலன் முடிந்துவிட்டது. இனி இவரால் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் சாதிக்க முடியாது. காம்பிர், ரோகித் ஏற்கனவே சாதித்து விட்டனர். 


டில்லிக்கு இல்லை:

டில்லி அணி கேப்டன் பீட்டர்சன் வலுவானவர் தான். பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் கிறிஸ்டன் உள்ளது, அணிக்கு எதிரான பலனை கொண்டு வருகிறது.

பெங்களூருவின் கோஹ்லிக்கு, ஐ.பி.எல்., அல்லது ஏதாவது பெரிய தொடரில் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் உள்ளது. அதேநேரம், அணியின் ஜாதகத்தை பார்க்கும் போது, சமநிலையில்லாமல் உள்ளது. 


பெய்லி எப்படி:

பஞ்சாப்பின் பெய்லி, ராஜஸ்தானின் வாட்சன் என, இருவரும் 1981, 1982ல் பிறந்தவர்கள். இவர்களது வலுவான ஜாதக பலன் காரணமாக, 2014ல் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. 

இதற்கு அடுத்து ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.