IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை


இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனவர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய வீரரான அவரை மும்பை இந்தியன்ஸ அணி ரூ.5.30 கோடிக்கு எடுத்தது. ஆனால் மும்பை அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் மேக்ஸ்வெலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அவருக்கு ஆடவாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டு விட்டார்.
 
கேப்டன் பாண்டிங், போலார்ட், ஜான்சன், சுமித் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியில் ஆடினார்கள். இனிவரும் போட்டிகளில் சுமித் அல்லது ஜான்சன் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

புது வரலாறு படைக்குமா பஞ்சாப்


ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

கடந்த 5 தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வென்றதில்லை. இம்முறை வெற்றி பெற்று புது வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மாத்யூஸ் தலைமையிலான புனே அணியை எதிர்கொள்கிறது. 

முதல் போட்டியில், ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் புனே அணி உள்ளது. 

துவக்கத்தில் ராபின் உத்தப்பா கைகொடுக்கலாம். யுவராஜ் இன்றாவது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும். 

ராஸ் டெய்லர் எழுச்சி பெற்றால் நல்லது. சாமுவேல்ஸ், கேப்டன் மாத்யூஸ் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். 

கில்கிறிஸ்ட் பலம்: பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் கில்கிறிஸ்ட் தான் மிகப் பெரும் பலம். 

இவர் அதிரடி காட்டினால், எளிதாக வெற்றி பெறலாம். ஷான் மார்ஷ் காயத்தில் இருப்பதால், இப்போட்டியில் பங்கேற்க மாட்டார். 

எனவே, கில்கிறிஸ்ட்டுடன் டேவிட் ஹசி அல்லது பாமர்ஸ்பச் துவக்கம் தர வாய்ப்புண்டு. "மிடில்-ஆர்டரை' கவனித்துக் கொள்ள, அசார் மகமூத், டிமிட்ரி மஸ்கரானஸ் உள்ளனர். 

வேகப்பந்துவீச்சில் ஜொலிக்க ரியான் ஹாரிஸ், மன்பிரீத் கோனி, பிரவீண் குமார் காத்திருக்கின்றனர். அனுபவ பியுஸ் சாவ்லா உள்ளது நம்பிக்கை அளிக்கிறது.

சேப்பாக்கத்தில் 33-வது ஐ.பி.எல். போட்டி


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 33-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதுவரை நடந்த 32 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 21 போட்டியில் வெற்றி பெற்றது. 11 ஆட்டத்தில் தோற்றது. 

2011-ம் ஆண்டு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தான் மோதிய 8 ஆட்டத்திலும் வென்று சாதனை படைத்து கோப்பையை வென்றது. இங்கு சூப்பர் கிங்ஸ் வீரர் முரளிவிஜய் 2 முறை சதம் அடித்துள்ளார். 

2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 56 பந்தில் 127 ரன்னும், கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 58 பந்தில் 113 ரன்னும் எடுத்தார்.

வாழ்த்து மழையில் டிராவிட்


இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். 

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

தவிர, லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற, இந்தியாவின் மேரி கோமுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 


பத்மஸ்ரீ யோகேஷ்வர்:

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் யோகேஷ்வர் தத், 2012 பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 


10வது கிரிக்கெட் வீரர் 

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர், லாலா அமர்நாத், வினோ மன்கட், உள்ளிட்ட வீரர்கள் வரிசையில் பத்ம பூஷண் விருது பெற்ற 10வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றார் டிராவிட். 

இந்திய அணியின் தூண் என்ற போற்றப்பட்ட இவர், 164 டெஸ்டில் 13, 288 ரன்கள், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள் எடுத்துள்ளார். 

பத்ம பூஷண் விருது வென்ற இவருக்கு சக வீரர் ரகானே உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சினிடம் இருந்து பாடம் கற்ற பிரக்யான் ஓஜா


இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு பந்துவீசுவதன் மூலம் சிறந்த பாடம் கற்றுக் கொள்ளலாம்,'' என, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, 26. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், ஜேம்ஸ் பட்டின்சனை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதுகுறித்து பிரக்யான் ஓஜா கூறியது: ஐ.பி.எல்., தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க கிடைத்த சிறந்த மேடையாக திகழ்கிறது. கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடினேன். 

ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடித்தேன். ஒவ்வொரு அணியிலும் உள்ள சீனியர் வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த அனுபவம் போட்டியில் சாதிக்க உதவும்.

முதல் நான்கு தொடர்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது சிறப்பாக (54 போட்டி, 60 விக்கெட்) பந்துவீசினேன். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய போது லேசான பின்னடைவை சந்தித்தேன். அதன்பின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எழுச்சி கண்டு, இழந்த "பார்மை' மீட்டேன்.

மும்பை அணியில் இணைந்த பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி முகாமில் இவருக்கு பந்துவீசுவதன் மூலம், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். பவுலிங் குறித்து சச்சின் வழங்கிய ஆலோசனைகள் போட்டியில் சாதிக்க கைகொடுத்தது. இவர் சிறந்த வீரராக மட்டமல்லாமல், நல்ல மனிதராகவும் இருப்பது சிறப்பம்சம்.

இம்முறை எங்கள் அணியின் ஆலோசகராக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வருகையால் எங்கள் அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவரிடம் இருந்து சுழற்பந்துவீச்சு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் சிறந்த பவுலராக வலம் வர வாய்ப்பு உள்ளது.

கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு முறை உலக கோப்பை பெற்றுத் தந்துள்ளார். இம்முறை, மும்பை அணியை திறம்பட வழிநடத்தி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று தருவார் என நம்புகிறேன்.

எங்கள் அணியில் உள்ள மற்றொரு அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இளம் வீரர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பயிற்சியாளர் ஜான் ரைட், இந்திய அணியை எழுச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். இதேபோல இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வார் என நினைக்கிறேன். 

தவிர இம்முறை பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு ஜான் ரைட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இது போட்டியில் சாதிக்க உதவும்.
இவ்வாறு பிரக்யான் ஓஜா கூறினார்.