ஒலிம்பிக்கில் நிறைய பதக்கம் வெல்வேன் - செய்னா

ஒலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கம் வென்று சாதிப்பேன்,'' என, லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில் வெண்கலம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் அரையிறுதி வரை முன்னேறினார். அரையிறுதியில் சீனாவின் இகான் வாங்கிடம் தோல்வி அடைந்தார்.

பின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மற்றொரு சீன வீராங்கனையான ஜின் வாங்கை சந்தித்தார். இதில் ஜின் வாங் காயம் காரணமாக பாதியில் விலகியதால் செய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இவர், மல்லேஸ்வரிக்கு (2000, சிட்னி) பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இது, தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 10வது ஒலிம்பிக் பதக்கம்.


உற்சாக வரவேற்பு:

நேற்று லண்டனில் இருந்து டில்லி வந்த செய்னா நேவல், அவரது தந்தை ஹர்விர் சிங் மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு இந்திரா சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் அங்கிருந்து, சொந்த ஊருக்கு செல்ல ஐதராபாத் செல்லும் விமானத்தில் புறப்பட்டார்.

டில்லியில் செய்தியாளர்களுக்கு செய்னா அளித்த பேட்டி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது நீண்ட நாள் கனவு. இருப்பினும் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. தவிர, ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை கூடுதல் உற்சாகம் அளிக்கிறது.

பதக்கம் பெறுவதற்காக மேடை ஏறியபோது அழ ஆரம்பித்துவிட்டேன். இத்தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இதை விட சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை. இது, எனது கடின உழைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது ஆரம்பம் தான். ஒலிம்பிக் போட்டியில் இன்னும் நிறைய பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவேன்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின், என்னை சாம்பியனாக உணர்கிறேன். இதற்காக முதலில் பயிற்சியாளர் கோபிசந்த், எனது தந்தைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இந்த அளவுக்கு என்னால் சாதித்திருக்க முடியாது. இதேபோல சக வீரர், வீராங்கனைகள், போட்டியின் போது ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பதக்கம் வென்ற பின், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதிக்க வாழ்த்தினர்.

பீஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய நான், இம்முறை பதக்கம் வென்று சாதித்தேன். ஆண்கள் ஒற்றையரில் காஷ்யப் காலிறுதி வரை முன்னேறினார். கலப்பு இரட்டையரின் ஜுவாலா கட்டா, திஜு ஜோடி நன்றாக விளையாடியது. இந்திய நட்சத்திரங்களின் செயல்பாடு, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கம் வென்று சாதிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.


வாழ்க்கை முழுமையானது: கோபிசந்த்

செய்னா நேவல் பதக்கம் வென்றது குறித்து அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ""லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில் செய்னா நேவல் பதக்கம் வென்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இதன்மூலம் எனது வாழ்க்கையும் முழுமையானது. ஒருவேளை பதக்கம் பெற முடியாமல் போனால், வாழ்க்கை முழுமை பெற்றிருக்காது.

இது செய்னாவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதற்காக இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தார். இன்னும் இவர் இரண்டு ஒலிம்பிக், இரண்டு ஆசிய விளையாட்டு மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று நிறைய பதக்கம் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.

குத்துச்சண்டை - அரையிறுதியில் மேரி கோம்

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் இந்தியாவின் மேரி கோம் (51 கி.கி.,) முன்னேறினார். இதன்மூலம் குறைந்தது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். வட்டு எறிதல் போட்டியின் பைனலுக்கு இந்திய வீரர் விகாஷ் கவுடா முன்னேறினார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான குத்துச்சண்டை "பிளை வெயிட் 51 கி.கி., எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மேரி கோம், டுனிசியாவின் மரோயா ரஹாலியை சந்தித்தார்.


மேரி ஆதிக்கம்:

இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றை 2-1 எனக் கைப்பற்றிய மேரி கோம், இரண்டாவது சுற்றில் 3 புள்ளிகள் பெற்று 5-3 என முன்னிலை வகித்தார். மூன்றாவது சுற்றில் அபாரமாக ஆடிய இவர் 6 புள்ளிகள் பெற்றார். கடைசி சுற்றில் 4 புள்ளிகள் பெற்ற மேரி கோம் 15-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.


மூன்றாவது பெண்:

இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார் மேரி கோம். ஏனெனில் அரையிறுதியில் ஒருவேளை இவர் தோல்வி அடைந்தால் கூட வெண்கலப் பதக்கம் கிடைக்கும். இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறார்.

தவிர இவர், மல்லேஸ்வரி (2000), செய்னா நேவலுக்கு (2012) பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெறுகிறார்.
நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் மேரி கோம், இங்கிலாந்தின் நிகோலா ஆதம்சை சந்திக்க உள்ளார்.


பைனலில் விகாஷ்:

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விகாஷ் கவுடா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 65 மீ., தூரம் வட்டு எறிந்தால் பைனலுக்கு நேரடியாக தகுதிபெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் 63.52 மீ., தூரம் வட்டு எறிந்த விகாஷ் கவுடா, இரண்டாவது வாய்ப்பில் 65.20 மீ., தூரம் எறிந்தார். இதன்மூலம் பைனலுக்கு நேரடியாக முன்னேறினார். இன்று பைனல் நடக்கிறது.

தவிர இவர், ஒலிம்பிக் தடகளப் போட்டியின் பைனலுக்கு முன்னேறிய ஏழாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக மில்கா சிங் (400 மீ., ஒட்டம், 1960), குர்பச்சான் சிங் ரந்தவா (100 மீ., தடை ஓட்டம், 1964), ஸ்ரீராம் சிங் (800 மீ., ஓட்டம், 1976), பி.டி. உஷா (400 மீ., தடை ஒட்டம், 1984), அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல், 2004), கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல், 2012) ஆகியோர் பைனல் வரை முன்னேறினர்.


ககன் நரங் "அவுட்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள்-3 பொஷிஷன்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் "புரோன் பிரிவில் 398 புள்ளிகள் பெற்ற ககன் நரங், "ஸ்டேண்டிங் பிரிவில் 377 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அடுத்து நடந்த "நீலிங் பிரிவில் 389 புள்ளிகள் பெற்ற ககன் நரங், மொத்தம் 1164 புள்ளிகள் பெற்று, 20வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

மற்றொரு இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் 1161 புள்ளிகள் (395 + 378 + 388) பெற்று, 26வது இடம் பிடித்து தகுதிச் சுற்றோடு வெளியேறினார்.


மனவ்ஜித் ஏமாற்றம்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் "டிராப் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் மனவ்ஜித் சிங் சாந்து பங்கேற்றார். தகுதிச் சுற்றில் மொத்தம் 119 புள்ளிகள் பெற்ற இவர், 16வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.


ஆறுதல் வெற்றி கிடைக்குமா * ஹாக்கியில் இன்று கடைசி மோதல்

ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசி லீக் ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. "பி பிரிவில் உள்ள இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் துணிச்சலாக போராடியது. இதையடுத்து, அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகமானது.

ஆனால், அடுத்து எல்லாமே தலைகீழானது. நியூசிலாந்துடனான போட்டியில் 1-3 என தோற்று, பின், "நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு எதிராக 2-5 என, படு மோசமாக தோல்வியடைந்தது. கடந்த போட்டியில் தென் கொரியாவுடன் 1-4 என, வீழ்ந்தது.

இன்று தனது கடைசி லீக் போட்டியில் பெல்ஜியத்தை சந்திக்கிறது. தொடரின் துவக்கத்தில் பலவீனமான அணியாக கருதப்பட்ட பெல்ஜியம், தென் கொரியாவை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்துள்ளது.

இதனால் இன்று இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறவே கடுமையாக போராட வேண்டியது இருக்கும். தவிர, இதில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி "பி பிரிவில் தற்போதுள்ள கடைசி இடம் மாறாது.


வரலாறு திரும்புமா:

ஒருவேளை வரும் 11ம் தேதி நடக்கும் 11, 12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அல்லது தென் ஆப்ரிக்காவை சந்திக்கும். இதிலும் தோற்கும் பட்சத்தில், 1986ல் லண்டனில் நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கடைசி இடம் பெற்ற நிலை ஏற்படலாம்.

இதே பிரிவில் இன்று நடக்கும் பிற போட்டிகளில் ஜெர்மனி-நியூசிலாந்து, தென் கொரியா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

மீண்டும் பதக்கம் வெல்வாரா ககன்?

லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று நடக்கவுள்ள 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் பங்கேற்கிறார். ஏற்கனவே 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் வெண்கலம் வென்ற இவர், மீண்டும் ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இன்று நடக்கவுள்ள ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் இந்தியா சார்பில் ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புட் பங்கேற்கின்றனர்.

இம்முறை ககன் நரங் மூன்று பிரிவு போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் ககன் நரங் வெண்கலம் வென்று, இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தார். ஆனால் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவில் பைனலுக்கான தகுதிச் சுற்றில் 18வது இடம் பிடித்து வெளியேறினார்.

கடைசி வாய்ப்பான 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் பதக்கம் வென்று சாதிப்பார் என நம்பப்படுகிறது. ஏனெனில் இவர், மெல்போர்ன் (2006) மற்றும் டில்லி (2010) காமன்வெல்த் போட்டியில் 50 மீ., "ரைபிள்-3' தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டியில் மொத்தம் 4 தங்கம் வென்றுள்ளார்.

தவிர 2009ல் நடந்த உலக கோப்பை தொடருக்கான 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் ஒரு தங்கம் வென்றுள்ளார்.

சஞ்சீவ் ராஜ்புட், 2006ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டி 50 மீ., "ரைபிள்-3' தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றார். டில்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 50 மீ., "ரைபிள்-3' தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.

இதனால் இன்றைய போட்டியில் குறைந்தபட்சம் ஒரு பதக்கம் கிடைக்கலாம்.


சாதிப்பாரா விகாஷ் கவுடா:

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விகாஷ் கவுடா பங்கேற்கிறார். டில்லி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற இவர், 2010ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் இவர் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் குறைந்தபட்சம் வெண்கலம் வென்று சாதிக்கலாம்.


விஜேந்தர் எதிர்பார்ப்பு:

கடந்த பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய வீரர் விஜேந்தர் சிங், இன்று நடக்கவுள்ள "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில், உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவை சந்திக்கிறார்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அரையிறுதிக்கு முன்னேறலாம். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பை உறுதி செய்யலாம். டில்லி காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற விஜேந்தர், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.

கடைசி தங்கம் வென்றார் பெல்ப்ஸ்

ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், தனது கடைசி பதக்கமாக தங்கம் வென்றார். அமெரிக்காவின் முன்னணி நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், 26. ஏதென்ஸ் (2004), பீஜிங் (2008) ஒலிம்பிக்கில் மொத்தம் 16 (14 தங்கம், 2 வெண்கலம்) வென்ற இவர், லண்டன் ஒலிம்பிக்கில், 4*100 மீ., "பிரீஸ்டைல் ரிலே', 200 மீ., தனிநபர் "பட்டர்பிளை' போட்டிகளில் வெள்ளி வென்றார்.

தொடர்ந்து 4*200 மீ., "பிரீஸ்டைல் ரிலேயில்' தங்கம் கைப்பற்றிய பெல்ப்ஸ், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற ரஷ்ய "ஜிம்னாஸ்டிக்' வீராங்கனை லாரிசா லடினைனாவின் சாதனையை (18 பதக்கம்) முறியடித்து, 19 பதக்கம் வென்றார். தவிர, 200 மீ., தனிநபர் "மெட்லே' போட்டியிலும் தங்கம் கைப்பற்றினார்.

நேற்று முன்தினம் தனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக 100 மீ., "பட்டர்பிளை' போட்டி பைனலில் பங்கேற்றார். இதில் 51.21வினாடியில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதுவே, இவரது கடைசி பதக்கமாக அமைந்தது.

லண்டன் ஒலிம்பிக்கில் மட்டும் 3 தங்கம், 2 வெண்கலம் வென்றார் பெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டியில் இருந்து விடைபெறும் இவரது மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை, 21 ஆக (17 தங்கம், தலா 2 வெள்ளி, வெண்கலம்) உயர்ந்தது.

கோப்பை வென்றது இந்தியா - இலங்கை மீண்டும் தோல்வி

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 4-1 என வென்று, கோப்பையை கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில், இந்திய அணி 3-1 என, தொடரை வென்றது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, பல்லேகெலேயில் நடந்தது.


மாத்யூஸ் கேப்டன்:

"டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சேவக் நீக்கப்பட்டு, ரகானே வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர்தனா, ஹெராத்துக்கு பதில், சேனநாயகே, கபுகேதிரா இடம் பெற்றனர். இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பை ஏஞ்சலோ மாத்யூஸ் ஏற்றார்.


ரோகித் வீண்:

இந்திய அணிக்கு ரகானே (9) அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தார். விராத் கோஹ்லி 23 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா (4), வழக்கம் போல விரைவில் திரும்பினார். பின், காம்பிர், மனோஜ் திவாரி ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

காம்பிர் தனது 33வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் மனோஜ் திவாரி, முதல் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில், மனோஜ் திவாரி (65) அவுட்டானார். ரெய்னா வந்த வேகத்தில் "டக் அவுட்டானார். காம்பிர் 88 ரன்னில் திரும்பினார்.


தோனி அதிரடி:

அடுத்து வந்த தோனி, அதிரடியில் மிரட்டினார். பெரேரா ஓவரில் "ஹாட்ரிக் பவுண்டரி அடித்த இவர், 46வது அரைசதம் அடித்தார். 38 பந்துகளில் தோனி 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது. இர்பான் (29), அஷ்வின் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


தில்ஷன் "டக்:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணி இர்பான் பதான் வேகத்தில் திணறியது. இவரது பந்துவீச்சில் துவக்கத்தில் தில்ஷன்(0), தரங்கா(0) வெளியேறினர். சண்டிமால் (8), மாத்யூஸ் (13), கபுகேதிரா (9) நீடிக்கவில்லை.


திரிமான்னே அபாரம்:

அடுத்து இணைந்த திரிமான்னே, ஜீவன் மெண்டிஸ் ஜோடி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. திவாரி ஓவரில் 2 சிக்சர் அடித்த திரிமான்னே, தனது 4வது அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில் திரிமான்னே (77) அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ், முதல் அரைசதம் (72) அடித்த போதும், அது வெற்றிக்கு உதவவில்லை.

கடைசி நேரத்தில் பெரேரா (18), சேனநாயகே (7), மலிங்கா (10) ஏமாற்ற, இலங்கை அணி 45.4 ஓவரில், 274 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

இந்தியா சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய இர்பான் பதான், ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகனாக விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.


இனி "நம்பர்-2

இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி, சர்வதேச தரவரிசையில் 2வது இடத்துக்கு (119) முன்னேறியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (119) தசம புள்ளி வித்தியாசத்தில் உள்ளது. அடுத்த 3 இடங்களில் தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (118), இலங்கை (110) அணிகள் உள்ளன.