சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியதன் பின்னணியில் ராகுல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சாதனை வீரர் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் அடித்தவர். 24 ஆண்டுகால கிரிக்கெட் திறமையை கவுரவிக்கும் வகையில், இவர் ஓய்வு பெற்ற (2013, நவ., 16) சில மணி நேரங்களில், நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
இவ்விருது மறைந்த ‘ஹாக்கி ஜாம்பவான்’ தியான்சந்த்துக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்காக இவரை புறக்கணித்துவிட்டு, கடைசி நேரத்தில் சச்சினை தேர்வு செய்ததாக சர்ச்சை எழுந்தது.
இதன் பின்னணியில் காங்., துணைத் தலைவர் ராகுல் இருந்ததாக தெரிகிறது.
அதாவது, 2013, நவ., 14ல் சச்சினின் கடைசி டெஸ்ட், மும்பையில் துவங்கியது. நாடு முழுவதும் இவருக்கு எழுந்த ஆதரவு அலையை ராகுல் தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பியுள்ளார். இதனை மனதில் வைத்து சச்சினின் ஆட்டத்தை பார்க்க மும்பை கிளம்பி இருக்கிறார்.
அப்போது பிரதமர் அலுவலகத்துடன் ‘பாரத ரத்னா’ விருது தருவது குறித்து பேசியுள்ளார். உடனே, சச்சின் குறித்த விவரங்களை அனுப்புமாறு, நவ., 14, மதியம்1.35 மணிக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் ‘பேக்ஸ்’ அனுப்பியது.
மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பெற்றது பிரதமர் அலுவலகம். மறுநாள் (நவ.,15) அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு ஒப்புதல் தரும்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார். அவரும் அன்றே கையெழுத்திட, நவ., 16ல் விருது குறித்து அறிவிப்பு வெளியானது.
இப்படி ராகுலின் தலையீடு இருந்ததால் தான், அவசர கதியில் வேலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment