எல்லை மீறினாரா தோனி - கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ.,

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தோனிக்கு, பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.      

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். விரைவில் பிளட்சர் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.            
                        
இதனை மறுத்த கேப்டன் தோனி கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடர்(2015) வரை இந்திய அணிக்கு பிளட்சர் தான் பயிற்சியாளர். இவர் தான் ‘பாஸ்’. இவரது அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ரவி சாஸ்திரி மேற்பார்வை மட்டும் செய்வார்,’’ என்றார்.    
  
பொதுவாக பயிற்சியாளர் தொடர்பான முடிவுகளை பி.சி.சி.ஐ., தான் எடுக்கும். இந்தச் சூழலில் தோனி தன்னிச்சையாக கருத்து வெளியிட்டது மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.      

அதிகாரம் இல்லை: இது குறித்து பி.சி.சி.ஐ.,யின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி மற்றும் இந்திய அணியுடன் பல தொடர்களில் மானேஜராக சென்ற ஒருவர் கூறியது: இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் இருக்க வேண்டும் என்பதை தோனி முடிவு செய்ய முடியாது. 

இதை பி.சி.சி.ஐ., தான் தீர்மானிக்க வேண்டும். வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் யார், பயிற்சியாளர் யார் என்பதை தேர்வுக்குழு  தான் முடிவு செய்யும். இந்திய அணி கேப்டனிடம் இருந்து இது போன்ற கருத்து வெளியானது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அடுத்த செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும்.    
        
அணியின் ‘பாஸ்’ யார் என்பது குறித்து தோனி கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. இதற்கான அதிகாரம் இவருக்கு கிடையாது.       
      
இவ்விஷயத்தில் தோனி வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். ‘மீடியா’ தரப்பில் இருந்து எப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கத்தான் செய்வர். அனுபவம் நிறைந்த கிரிக்கெட் வீரராக இருப்பவர், தனது எல்லை என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்து பதில் தர வேண்டும். 

போட்டியில் களமிறங்கும் 11 வீரர்கள் யார் என்பதை, பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் முடிவு செய்ய முடியாது. அதேபோல, யார், எத்தனை காலத்துக்கு பதவியில் இருப்பர் என்பதை தோனி முடிவு செய்யக் கூடாது. அணியின் துணை பயிற்சியாளர்களை நியமிப்பது,  தொடர்பாக கருத்து தெரிவிக்கும் உரிமையும் இவருக்கு கிடையாது.     இவ்வாறு அவர் கூறினார்.           

மோதல் ஆரம்பம்: பயிற்சியாளரை ஓரங்கட்ட வேண்டும் என்று தான் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இது தோனிக்கு பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் தான் வெளிப்படையாக பிளட்சருக்கு ஆதரவு தெரிவித்தார். இது தோனி–பி.சி.சி.ஐ., இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment