இந்திய அணி அசத்தல் துவக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில், உத்தப்பா, ரகானேவின் அரைசதம் கைகொடுக்க,  7 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.   
   
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பர்வேஸ் ரசூல், அக்சர் படேல் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                 


முஷ்பிகுர் அபாரம்: 

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0), மோமினுல் ஹேக் (6) ஏமாற்றினர். மற்றொரு துவக்க வீரர் அனாமுல் ஹேக் (44) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (59)அரைசதம் அடித்தார். 


சாகிப் அரைசதம்: 

‘மிடில்–ஆர்டரில்’ வந்த சாகிப் அல் ஹசன் (52), தன்பங்கிற்கு அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் களமிறங்கிய மகமதுல்லா (41), நசிர் ஹொசைன் (22) ஓரளவு கைகொடுத்தனர். ஜியாவுர் ரஹ்மான் (2), மொர்டசா (18) நிலைக்கவில்லை.        
          
வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. அப்துர் ரசாக் (16), அல்–அமின் ஹொசைன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, அக்சர் படேல், பர்வேஸ் ரசூல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.             


சூப்பர் துவக்கம்: 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா, அஜின்கியா ரகானே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய உத்தப்பா, ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது உத்தப்பா (50) அவுட்டானார்.     


மழை குறுக்கீடு: 

இந்திய அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், இரண்டு மணி நேரத்துக்கு மேல், மீண்டும் போட்டி துவங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 26 ஓவரில் 150 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.    
   
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு புஜாரா (0) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய ரகானே, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, மகமதுல்லாவில் 25வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.      

இந்திய அணி 24.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (15), அம்பதி ராயுடு (16) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.      

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி மிர்புரில் நாளை (ஜூன் 17) நடக்கிறது.

0 comments:

Post a Comment