இங்கிலாந்து அணியை அச்சுறுத்தும் சச்சின்

எதிர்வரும் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு சச்சின் தான் அச்சுறுத்தலாக இருப்பார்,'' என, மைக்கேல் வான், நாசர் உசேன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜூலை 21ம் தேதி துவங்குகிறது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.,) நடக்கும் 2000 வது டெஸ்ட் என்பது மற்றொரு சிறப்பு.

இத்தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் கூறியது:
மைக்கேல் வான்:

சிறந்த வீரர் என்பவர், அவ்வப்போது தனது"ஸ்டைலில்' சில மாற்றங்களை செய்து கொள்வார். ஏனெனில் அப்போது தான், அந்த விளையாட்டு போட்டியில் தொடர்ந்து அசத்த முடியும். தற்போது சச்சின் இப்படித் தான் உள்ளார். கடந்த 2007க்குப் பின் இவர், வித்தியாசமான வீரராக மாறியுள்ளார்.

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துகிறார். துவக்க காலத்தில் எப்படி ரன்கள் சேர்த்தாரோ, அதுபோல விளையாடி, அணிக்காக ரன்கள் சேர்க்கிறார்.

இங்கிலாந்து அணியில் இப்போதுள்ள டிரம்லெட், 2007க்குப் பின் சச்சினுக்கு எதிராக சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் சச்சினை பொறுத்தவரையில் எவ்வித பலவீனத்தையும் வைத்துக் கொள்வதில்லை.

இங்கிலாந்து வீரர்கள் இவரை "அவுட்' செய்ய தொடர்ந்து போராட வேண்டும். தவிர, "ஷார்ட் பிட்ச்' பந்துகளை வீசிப் பார்க்க வேண்டும். இருப்பினும் இவையெல்லாம், சச்சினுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளில், எந்த பலனையும் தரவில்லை என, அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

நாசர் உசேன்:

கடந்த சில ஆண்டுகளாக சச்சின், தனது ஆட்டமுறையை தொழில்நுட்பம் மற்றும் மனதளவில் மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது அவரது "ஷாட்டுகள்' ஆக்ரோஷமாகவும், கட்டுக்கடங்காமலும் உள்ளது. தனது விக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர், சில சாதனைகள் மற்றும் சதங்களுக்குப் பின், "ரன் மெஷினாக' மாறிவிட்டார்.

மைக் ஆர்தர்டன்:

கடந்த 1996ல் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த டெஸ்ட் போட்டியில், சச்சின் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை நழுவ விட்டேன். இதைப்பயன்படுத்தி சதம் அடித்து விட்டார். களத்தில் அமைதியாக, நிலையாக இருக்கும், இவரை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது. புராதான நம்பிக்கைகளில் அதிக நம்பிக்கையுள்ள சச்சின், எந்த தவறுக்கும் இடம் தராமல் விளையாடுவார்.

கிரகாம் கூச்:

சச்சினை 1990ல் இருந்து பார்க்கிறேன். 17 வயது சிறுவனாக இருந்த போதே, இவரிடம் பெரிய திறமை இருந்தது. பந்துகளை சரியாக கணிக்கும் அவர், சரியான நேரத்தில், சரியான அளவில், விளாசுவார். இதுபோன்ற பல்வேறு வகையான திறமைகள் தான், சச்சினை உலகத் தரம் வாய்ந்த வீரராக உயர்த்தியுள்ளது.

விரைவில் இந்திய - பாக்., கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையில், விரைவில் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், இரண்டு அணிகள் பங்கேற்கும் (பைலேட்ரல்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. கடைசியாக இவ்விரு அணிகள் 2007ல் மோதின.

சமீபத்தில் வெளியான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இவ்விரு அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்திய அரசு, பாதுகாப்பு நலன் கருதி, இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு, பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதி அளிப்பதில்லை. இதனால் இத்தொடரை பாகிஸ்தானில் நடத்த வாய்ப்பு இல்லை.

சமீபத்தில், இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட கால்பந்து தொடரில் விளையாட இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியா அல்லது அன்னிய மண்ணில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக் இடையில் கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான முடிவு அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு, இந்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து, அடுத்த மாதம் தான் முடிவு செய்ய உள்ளோம். அதன்பின், இந்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம் என்றார்.

தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்

கேப்டன் தோனி நேற்று தனது 30வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை பெற்று தந்தார். இந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்று காட்டினார்.

தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் இவர், நேற்று தனது 30வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடினார்.

இவர் பிறந்த ராஞ்சியில் ரசிகர்கள் "கேக்' வெட்டியும் இனிப்புகள் கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஜார்க்கண்ட் மாநில துணை முதல்வர் சுதேஷ் மகாத்தே உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறுகையில்,""டெஸ்ட், 50 ஓவர், "டுவென்டி-20' என கிரிக்கெட்டின் அனைத்து வகையான போட்டிகளிலும் தோனி சிறந்து விளங்குவார்.

இதன் மூலம் ரசிகர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சி அளிப்பார்,''என்றார்.

சவாலை சந்திக்க தயார்: யுவராஜ்

இங்கிலாந்து வீரர்களின் சவாலை சந்தித்து, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதே முக்கிய குறிக்கோள்,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் (ஜூலை 21-ஆக.,18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூலை 21ம் தேதி, லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின் இடம் பெற்றார் யுவராஜ் சிங். இதுகுறித்து இவர் கூறியது:

இங்கிலாந்து அணி மிகச்சிறந்த அணி. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானது. ஆனால், இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பலர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபகாலமாக, வெளிநாடுகளிலும் இந்திய அணி நல்ல வெற்றிகளை பெறத் துவங்கியுள்ளது. இதனால் இரு அணிகள் இடையிலான தொடர், சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் விளையாடுவதும் கிரிக்கெட் தான். இதற்கான அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்பதே விருப்பம். இது அவ்வளவு எளிதல்ல என்பது நன்கு தெரியும்.

தற்போதைய இங்கிலாந்து தொடர், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சவாலான தொடர். ஆனால் ஒவ்வொரு சவாலையும், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சாதிக்க முயற்சிப்பேன்.

இங்கிலாந்து அணியின் பீட்டர்சனைப் பற்றி நன்கு தெரியும். அவருக்கு பந்து வீச மிகவும் ஆர்வமாக உள்ளேன். இதன் மூலம், பீட்டர்சனையும், மற்ற வீரர்களையும் அவுட்டாக்கினால், மிகவும் பெருமைப்படுவேன்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

தொடரை கைப்பற்றுமா இந்தியா

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியஅணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், இன்று டொமினிகாவின் ரோசாவு நகரில் உள்ள விண்சர் பார்க் மைதானத்தில் துவங்குகிறது.

பார்படாஸ் ஆடுகளத்தை போல, இங்கும் பந்துகள் அதிக வேகத்துடன் பவுன்சர் ஆகும் என்று தெரிகிறது. இதற்கேற்ப இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது. கடந்த இரண்டு போட்டிகளில் 22 ரன்கள் மட்டும் எடுத்த முரளி விஜய், ராம்பால் பந்தில் அடிக்கடி அவுட்டாகிறார்.

இதேபோல, 46 ரன்கள் எடுத்த விராத் கோஹலி, எட்வர்ட்ஸ் பவுலிங் என்றால் பயப்படுகிறார். இவர்கள், இன்று வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை அணியில் மாற்றம் செய்ய கேப்டன் தோனி விரும்பும் பட்சத்தில் பார்த்திவ் படேல், பத்ரிநாத் களமிறங்கலாம்.

மற்றபடி துவக்க வீரர் அபினவ் முகுந்த், சீனியர் டிராவிட், லட்சுமண் அணிக்கு மீண்டும் கைகொடுக்கலாம். வழக்கம் போல ரெய்னா இம்முறையும் நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைப்பார் என நம்புவோம்.


முனாப் வாய்ப்பு:

பவுலிங்கை பொறுத்தவரையில் இஷாந்த் காயத்தால் அவதிப்பட்டாலும் இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. இவருடன் பிரவீண் குமார் சாதிக்க முயற்சிக்கலாம். அபிமன்யு மிதுனுக்குப் பதிலாக, இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற முனாப் படேலை சோதித்து பார்த்தால் நல்லது.

சுழலில் வழக்கம் போல ஹர்பஜன் சிங் இறங்கலாம். இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் தேவை எனில், அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு செல்லும்.


சர்வான் இல்லை:

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வான் நீக்கப்பட்டு, இளம் வீரர் பாவெல் சேர்க்கப்பட்டுள்ளது பலன் தருமா என இன்று தெரியும். துவக்க வீரர் சிம்மன்ஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் இளம் வீரர்கள் கிர்க் எட்வர்ட்சிற்கு வாய்ப்பு செல்லலாம்.

மற்றபடி, பரத், "மிடில் ஆர்டரில்' டேரன் பிராவோ, சீனியர்கள் சந்தர்பால், கேப்டன் சமி, கடந்த போட்டியில் அசத்திய சாமுவேல்ஸ், விக்கெட் கீப்பர் பாக் ஆகியோர் திறமை நிரூபித்து வெற்றிபெற்று, தொடரை சமன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு பவுலிங்கில் எட்வர்ட்ஸ், ராம்பால் கைகொடுக்க காத்திருக்கின்றனர். தவிர, கீமர் ரோச், சுழலில் தேவேந்திர பிஷூ இந்திய அணிக்கு தொல்லை தரலாம்.

இதுவரை எந்த டெஸ்ட் தொடரிலும் தோல்வியடையாத கேப்டன் என்ற பெருமையை இம்முறையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் தோனி. இருப்பினும், இந்த போட்டியில் வென்று, வெற்றி கோப்பையுடன் திரும்புவார் என்று நம்பப்படுகிறது.