20 ஓவர் போட்டியில் 3 ஆண்டுகள் விளையாடுவேன்

இலங்கை சுழற்பந்து வீரர் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வு காணும் முன் அவர் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி யாரும் எட்ட முடியாத உலக சாதனை நிகழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் ஓய்வு பெற்று விட்டேன். மக்கள் இவர் ஏன் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார் என்று கேட்கும் நிலைக்கு விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் முன்கூட்டியே ஓய்வு பெற்றேன்.

அடுத்த உலக கோப்பைக்கு நான் தேவை என்று கருதினால் அதுவரை ஒரு நாள் போட்டியில் ஆடுவதாக இலங்கை தேர்வு குழுவினரிடம் கூறி இருக்கிறேன்.

20 ஓவர் போட்டியை பொறுத்த வரை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆடுவேன். கவுண்டி போட்டிகளிலும் பங்கேற்பேன்.

சுழற்பந்து என்பது கஷ்டமான ஒரு கலை. அது எல்லா வகையான கிரிக் கெட்டுக்கும் பொருந்தும். 20 ஓவர் போட்டிக்கு சுழற்பந்து சரிபட்டு வராது என்ற தவறான எண்ணம் இருந்தது. ஆனால் கடந்த 2 ஐ.பி.எல். போட்டிகளில் சுழற்பந்து தான் ஆதிக்கம் செலுத்தியது.

கடந்த டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் எடுக்க எனக்கு 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் 799 விக்கெட் தான் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனாலும் நம்பிக்கையோடு ஆடி 800-வது விக்கெட்டை எடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காத்திருக்கும் சாதனை

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்த சச்சின், அடுத்து அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க காத்திருக்கிறார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம், ஒருநாள் போட்டியில் 200 ரன் என்ற பல்வேறு சாதனைக்கு சொந்தக் காரர். இவர் இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் களமிறங்கியபோது, அதிக டெஸ்டில்(169) விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் (168 டெஸ்ட்) சாதனையை முறியடித்தார்.


ஜெயசூர்யா முதலிடம்:ஒருநாள் அரங்கில் அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் சச்சின் (442 போட்டி), பாகிஸ்தானின் இன்சமாம் (378), வாசிம் அக்ரம் (356), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (351) உள்ளனர்.


நழுவிய வாய்ப்பு:இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா-இலங்கை-நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இத்தொடருக்கான இந்திய அணியில் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் அதிக ஒரு நாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர் இச்சாதனை படைக்க, இன்னும் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும்.


வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் விளையாடும் பட்சத்தில், புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய சாதனை படைத்தார் சச்சின்

டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.


இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.


இது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த 20 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது. ஒரு நாள் போட்டிகளின் தன்மையும் மாறி விட்டது. "டுவென்டி-20' போட்டிகளின் வரவுக்குப் பின், டெஸ்ட் போட்டிகளும் அதிரடிக்கு மாறி விட்டன.

கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.


மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செயகிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலை சிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய


"டாப்-6' வீரர்கள்:


வீரர் நாடு போட்டி ரன்
சச்சின் இந்தியா 169 13742
ஸ்டீவ்வாக் ஆஸி., 168 10927
பார்டர் ஆஸி., 156 11174
பாண்டிங் ஆஸி., 146 12026
வார்ன் ஆஸி., 145 3154
டிராவிட் இந்தியா 141 11460


தகர்க்க முடியாது: சைமண்ட்ஸ்
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சாதனையை இனி யாரும் தகர்க்க முடியாது என்றார் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ். இது குறித்து அவர் கூறுகையில்,"" சச்சினின் சாதனை பாராட்டுக்குரியது. அவரது சாதனையை இனி யாரும் நெருங்க முடியாது என நினைக்கிறேன். தற்போது கிரிக்கெட் விளையாடத் துவங்கி உள்ளவர்கள், இனி 160 முதல் 170 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது சந்தேகம் தான்,'' என்றார்

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாக கருதவில்லை. அதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.

கொழும்புவில் இன்று நடக்கும் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் புதிய சாதனை படைக்க உள்ளார். டெஸ்ட் அரங்கில் 169 வது போட்டியில், களமிறங்க உள்ள சச்சின், அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை பெற உள்ளார். இது குறித்து சச்சின் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இது எனது கனவு. எனது ஆசை. கிரிக்கெட் அரங்கில், ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாகக் கருத வில்லை. இதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்.

கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அது எனது வாழ்நாளின் மறக்க முடியாத நிகழ்வு. இதற்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லை. 169 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க விருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட, வெகு விரைவாக எனது கிரிக்கெட் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் அரங்கில் பல முறை கஷ்டமான காலகட்டங்களை நான் கடந்துள்ளேன். அந்த சமயங்களில், மனம் தளரவில்லை. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, பல சமயங்களில் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாய் அமைந்தது. கிரிக்கெட் அரங்கில் எனது சாதனைகளை ஒரு இந்திய வீரரால் தான் தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன்.

இளம் வீரர்கள் முதலில் கனவு காண வேண்டும். பின்னர் அதனை நோக்கி முன்னேற வேண்டும். கடின முயற்சியுடனும், உண்மையுடனும் செயல்பட்டால், கூடிய விரைவில் கனவு நனவாகும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

சூப்பர் சிக்சர்

டுவென்டி-20' போட்டிகளில் சிக்சருக்கு பஞ்சமில்லை. வீரர்கள் தங்கள் அபார ஆட்டத்தால், சிக்சர் மழை பொழிகின்றனர்.


"டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 1100 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 39 சிக்சர் அடங்கும். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (38 சிக்சர்), வெஸ்ட் இண்டீசில் கிறிஸ் கெய்ல் (34 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் (31 சிக்சர்), டேவிட் வார்னர் (31 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.


கெய்ல் அதிரடி: "டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் உள்ளார். இவர் கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 10 சிக்சர் விளாசினார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் போஸ்மேன் (9 சிக்சர்), பிரண்டன் மெக்கலம் (8 சிக்சர்), இந்தியாவின் யுவராஜ் சிங் (7 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (7 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.


மெக்கலம் அபாரம்: "டுவென்டி-20' அரங்கில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளார். இவர் அதிகபட்சமாக 112 பவுண்டரி அடித்துள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (99 பவுண்டரி), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (90 பவுண்டரி), இலங்கையின் தில்ஷன் (86 பவுண்டரி), மகிலா ஜெயவர்தனா (78 பவுண்டரி) ஆகியோர் உள்ளனர்.


கிப்ஸ் அசத்தல்:"டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் உள்ளார். இவர் கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 14 பவுண்டரி அடித்தார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13 பவுண்டரி), நியூசிலாந்தின் ரெட் மண்ட் (13 பவுண்டரி) ஆகியோர் உள்ளனர்.

வீரர்கள் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், "டுவென்டி-20' அரங்கில் சிக்சர், பவுண்டரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.