ஐ.பி.எல்., சூதாட்டம் - மவுனம் கலைத்தார் தோனி

ஐ.பி.எல்., சூதாட்ட பிரச்னையில் என் பெயரையும் இணைத்து வெளியாகும் கற்பனை செய்தியை எப்போதும் தடுக்க முடியாது,’’ என, இந்திய அணி கேப்டன் தோனி கூறினார்.      

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்தது. 

இதில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 வீரர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. 

இதில், சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதே நேரம், சென்னை அல்லது பி.சி.சி.ஐ., தலைவர் பதவி என ஏதாவது ஒன்றில் மட்டுமே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.      

சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்ய 3 நீதிபதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல மாதங்களாக, வாய் திறக்காத தோனி, முதல் முறையாக பேசியுள்ளார்.       

இது குறித்து தோனி கூறுகையில்,‘‘ ஐ.பி.எல்., சூதாட்ட சர்ச்சையில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளதாக வந்த கற்பனை செய்தியை எதிர்பார்க்கவில்லை. இதனை ஒருபோதும் தடுக்க முடியாது. இவ்விஷயத்தை கவனமாக கையாள்கிறேன். ஒருவேளை இப்பிரச்னை முற்று பெற்றாலும், ஓரிரு நாட்களில் மற்றொரு கற்பனை செய்தி வெளியாகலாம்,’’ என்றார்.

0 comments:

Post a Comment