12 ஆயிரம் ரன்னை தவறவிட்ட சங்ககரா

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டில் 2–வது இன்னிங்சில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 12 ஆயிரம் ரன்னை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்கு அவருக்கு 17 ரன் தேவைப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் 5 ரன் எடுத்த நிலையில் (59 ரன்னில் அவுட்) பெவிலியன் திரும்பினார்.

128 டெஸ்டில் விளையாடி உள்ள சங்ககரா 11,988 ரன் எடுத்து உள்ளார். 12 ஆயிரம் ரன் எடுக்க அவருக்கு இன்னும் 12 ரன் தேவை. 

அடுத்த டெஸ்ட் தொடரில் தான் அவரால் இதை எடுக்க முடியும். டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சங்ககரா 5–வது இதில் உள்ளார்.

தெண்டுல்கர் 15,921 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார். பாண்டிங் (13,378 ரன்), காலிஸ் (13,289), டிராவிட் (13,288) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஓய்வு பெற்று விட்டனர்.

முதலிடம் பிடித்தார் அஷ்வின்

ஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டருக்கான’ ரேங்கிங்கில் (தரவரிசை), இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், இலங்கையின் சங்ககரா மீண்டும் முதலிடம் பிடித்தார்.      

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில், ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், பேட்டிங்கில் (40, 46 ரன்கள்) அசத்தியதே முன்னேற்றத்துக்கு காரணம். 

இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் (365 புள்ளி) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளார். இப்பட்டியலில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சனை முந்தி, 4வது இடம் பிடித்தார்.      
சங்ககரா முதலிடம்: பாகிஸ்தானுக்கு எதிராக காலேயில் நடந்த முதல் டெஸ்டில், 10வது முறையாக இரட்டை சதம் அடித்த இலங்கையின் சங்ககரா, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், மீண்டும் முதலிடம் பிடித்தார். 

முன்னதாக இவர், 2007 (டிசம்பர்), 2012ல் (நவம்பர்) வெளியிடப்பட்ட ரேங்கிங்கில் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். அடுத்த இரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஹசிம் ஆம்லா உள்ளனர். 

தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, 14வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இப்பட்டியலில், இந்தியாவின் புஜாரா, 10வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கும், விராத் கோஹ்லி, 15வது இடத்தில் இருந்து 20வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.     

ஆண்டர்சன் முன்னேற்றம்: பவுலர்களுக்கான தரவரிசையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், நான்கு இடங்கள் முன்னேறி, 9வது இடம் பிடித்தார். 

இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்சில் அசத்திய இங்கிலாந்தின் மொயீன் அலி, நான்கு இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 33வது இடம் பிடித்தார். இந்தியாவின் அஷ்வின், ஒரு இடம் பின்தங்கி, 13வது இடத்தை பெற்றார். மற்ற இந்திய பவுலர்களான பிரக்யான் ஓஜா 15வது, இஷாந்த் சர்மா 20வது இடத்தில் உள்ளனர்.

ஐ.சி.சி., விதிமுறை மாற்றப்படுமா?

ஐ.சி.சி., விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் இல்லை,’’ என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார். 

இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா ‘தள்ளு’ விவகாரம் குறித்து விசாரித்த ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார். 

இதை எதிர்த்து ஐ.சி.சி., ‘அப்பீல்’ செய்ய வேண்டும் என்ற, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

இதன் எதிரொலியாக, ஐ.சி.சி., நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கருத்து தெரிவித்திருந்தார். 

இது குறித்து ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் ஐ.சி.சி.,யிடம் இல்லை,’’ என்றார். 

ஜடேஜாவை மிரட்டிய ஆண்டர்சன்

ஆண்டர்சனின் அநாகரிக நடத்தை அம்பலமாகியுள்ளது. ரவிந்திர ஜடேஜாவின் பல்லை உடைத்து விடுவதாக மிரட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டின்,  இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இரு அணிகள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரித்த ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன்,  ஜடேஜாவுக்கு, போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கமிஷனர் கார்டன் லீவிஸ் லுாயிஸ், இருவரையும் விடுவித்து அதிர்ச்சி தீர்ப்பு அளித்தார்.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், ஆண்டர்சன் தனது தவறை ஒப்புக் கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் போர்டு வக்கீல் நடத்திய குறுக்கு விசாரணையின் போது, ஜடேஜாவை தள்ளி, பல்லை உடைப்பேன் என மிரட்டியதை ஒப்புக்கொண்டாராம். கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், ‘வீடியோ’ ஆதாரம் இல்லாததால் தண்டனையில் இருந்து தப்பி விட்டார். இதனால், கேப்டன் தோனி உள்ளிட்ட பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

ராகுல் தயவில் சச்சினுக்கு பாரத ரத்னா

சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியதன் பின்னணியில் ராகுல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் சாதனை வீரர் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் அடித்தவர். 24 ஆண்டுகால கிரிக்கெட் திறமையை கவுரவிக்கும் வகையில், இவர் ஓய்வு பெற்ற (2013, நவ., 16) சில மணி நேரங்களில், நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 

இவ்விருது மறைந்த ‘ஹாக்கி ஜாம்பவான்’ தியான்சந்த்துக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்காக இவரை புறக்கணித்துவிட்டு, கடைசி நேரத்தில் சச்சினை தேர்வு செய்ததாக சர்ச்சை எழுந்தது.

இதன் பின்னணியில் காங்., துணைத் தலைவர் ராகுல் இருந்ததாக தெரிகிறது.
அதாவது, 2013, நவ., 14ல் சச்சினின் கடைசி டெஸ்ட், மும்பையில் துவங்கியது. நாடு முழுவதும் இவருக்கு எழுந்த ஆதரவு அலையை ராகுல் தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பியுள்ளார். இதனை மனதில் வைத்து சச்சினின் ஆட்டத்தை பார்க்க மும்பை கிளம்பி இருக்கிறார்.

அப்போது பிரதமர் அலுவலகத்துடன் ‘பாரத ரத்னா’ விருது தருவது குறித்து பேசியுள்ளார். உடனே, சச்சின் குறித்த விவரங்களை அனுப்புமாறு, நவ., 14, மதியம்1.35 மணிக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் ‘பேக்ஸ்’ அனுப்பியது.

மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பெற்றது பிரதமர் அலுவலகம். மறுநாள் (நவ.,15) அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு ஒப்புதல் தரும்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார். அவரும் அன்றே கையெழுத்திட, நவ., 16ல் விருது குறித்து அறிவிப்பு வெளியானது.

இப்படி ராகுலின் தலையீடு இருந்ததால் தான், அவசர கதியில் வேலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.