சச்சினுக்கு கங்குலி ஆதரவு



சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த மண்ணான மும்பையில் நடத்துவது தான், அவருக்கு மரியாதை செலுத்துவது போல இருக்கும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார். 

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். 

இவர், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் அக்., 31ல் துவங்குகிறது. 

இதில், இரண்டு டெஸ்ட் போட்டிகளை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,), மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) என, இருவருமே சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட் போட்டியை, தங்களது மண்ணில் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கங்குலி கூறியது:

சச்சினின் சொந்தமண் மும்பை. இங்கு தான் இவரது அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது 200வது டெஸ்ட் போட்டியை மும்பையில் விளையாடினால், அது உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். தவிர, அவரது விருப்பத்தை நிறைவேற்றியது போல இருக்கும். 


மீண்டும் வராது:

இதுபோன்ற சம்பவம் மீண்டும் வரப்போவதில்லை. இப்போதைய நிலையில், உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த ஒரு வீரராலும், எப்போதும் முறியடிக்க முடியாது. இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்வு நடக்கும் போது, இதைக் காண நாம் எல்லோரும் அங்கு இருக்க வேண்டும்.

இது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும். சச்சினும் இந்த தருணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இப்போட்டியில் பேட்டிங்கில் திணறக் கூடாது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு வேண்டும்.


நிரப்ப முடியாது:

சச்சின் ஓய்வுக்குப் பின், இவரைப் போன்ற வீரரை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவது என்பது மிக கடினம். எதிர்வரும் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை சதம் அடித்து சச்சின் ஓய்வு பெற்றால், இப்போது விமர்சனம் செய்பவர்கள், இன்னும் கொஞ்சம் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று பேசுவர். 

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40 வயதில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதற்காக இவரை சச்சினுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில், அது தனிமனித விளையாட்டு. கிரிக்கெட் அப்படியல்ல சரியாக விளையாடவில்லை எனில் தேர்வு செய்ய மாட்டார்கள்.


கடின காலம்:

சமீபத்திய சூதாட்ட புகார்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு கடின காலம் தான். எனினும், இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும். ஆனால், அடுத்து வரும் 16 மாதங்கள், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் என, இந்திய அணிக்கு தொடர்ந்து சோதனை காத்திருக்கிறது. 

இவ்வாறு கங்குலி கூறினார்.

இந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்



இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ல் துவங்குகிறது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சதத்தில் சதம் உள்ளிட்ட ஏராளமான சாதனை புரிந்துள்ளார். 

தற்போது 198 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், தனது 200வது போட்டியை சொந்த மண்ணில் விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழிவகை செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியாவில் பங்கேற்க அழைத்தது. இதன்படி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி துவங்குகிறது. 

தவிர, 3 பயிற்சி போட்டியும் உள்ளன. மொத்தம் 4 வாரங்கள் இத்தொடர் நடக்கிறது. 

போட்டி நடக்கும் இடங்களை தேர்வு செய்யும் சுழற்சி முறைப்படி, குஜராத்தின் ஆமதாபாத்தில்தான் சச்சின் தனது 200வது டெஸ்ட்டில் விளையாட வேண்டும். 

ஆனால், இதை நடத்த மும்பை, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் போட்டியிடுகின்றன. 

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" இத்தொடருக்கான தேதி, மைதானம் போன்றவை விரைவில் வெளியிடப்படும்,'' என்றார். 

களிமண் கதாநாயகனுக்கு மவுசு

அமெரிக்காவில் நடக்கும் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், நடால் தான் கோப்பை வெல்வார் என, ஏராளமானோர் பந்தயம் கட்டுகின்றனர்.

ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால், 27. களிமண் கள நாயகன். இவருக்கு பிடித்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், 2005-2008, 2010-2013 என 8 முறை கோப்பை வென்றுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் யு.எஸ்., ஓபனிலும் (2010) நான்கு பட்டம் கைப்பற்றினார்.

முழங்கால் காயம் காரணமாக ஏழு மாதமாக டென்னிசில் விலகியிருந்த நடால், பிப். மாதம் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பினார். அப்போது முதல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதுவரை பிரேசில், மெக்சிகோ, இந்தியன் வெல்ஸ், பார்சிலோனா, மாட்ரிட், ரோம், மான்ட்ரியல், சின்சினாட்டி மற்றும் பிரெஞ்ச் ஓபன் என, மொத்தம் 9 போட்டிகளில் பட்டம் வென்றார். 


நடால் முதல்வன்:

நடாலின் இந்த அபாரமான "பார்ம்' காரணமாக, தற்போது அமெரிக்காவில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில், இவர் தான் கோப்பை வெல்வார் என, அதிகம் பேர் பந்தயம் கட்டுகின்றனர். இது 7/4 என்ற விகிதத்தில் <உள்ளது. 

ஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்



கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 

இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள தெண்டுல்கள் 200–வது டெஸ்டோடு ஒய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. 

அதற்கு ஏற்றவாறு 200–வது டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை நவம்பர் மாதம் இந்தியாவில் விளையாட அழைத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் தான் அவரது 200–வது டெஸ்ட் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ஓய்வு பெறும் முடிவில் நான் அவசரப்படவில்லை என்று தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– 

நான் 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மேலும் ஒரு அடியை எடுத்து வைக்க விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் நினைத்து பார்ப்பது இல்லை. 

ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டிய அவசரம் எதுவும் எனக்கு இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கிரிக்கெட்டின் கடவுள் என்று குறிப்பிட வேண்டாம். நான் தவறுகளை செய்பவன். 

நாம் எல்லோரும் தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன். 

1999–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனது தந்தையை இழந்தேன். இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. 

இவ்வாறு தெண்டுல்கள் கூறினார்.

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்



அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 55 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று அறிவித்தது.

கோல்கட்டாவில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று வெளியிட்டது. 

இதன்படி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் செப்., 7ம் தேதி வரை ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்மூலம், 55 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

முன்னதாக 1959ல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

கடைசியாக 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 4-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.

பயிற்சி போட்டிகள்: டெஸ்ட் போட்டிகள், டிரன்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஏஜியஸ் பவுல், ஓல்டு டிராபோர்டு மற்றும் ஓவல் மைதானங்களில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி, இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளான லீசெஸ்டர்ஷயர், டெர்பிஷயர் அணிகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 

இதேபோல, ஒருநாள் தொடருக்கு முன், மிடில்சக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள், பிரிஸ்டோல், சோபியா கார்டன்ஸ், டிரன்ட் பிரிட்ஜ், எட்பாஸ்டன், ஹெட்டிங்லி மைதானங்களில் நடக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், ""55 ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்,'' என்றார்.