இந்தியா மீண்டும் நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. 

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. 

பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி 114 புள்ளிகளுடன் தனித்து முதலிடம் பிடித்தது. முத்தரப்பு தொடரில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (111 புள்ளி) தசம புள்ளிகள் வித்தியாசத்தில் 4வது இடத்தில் உள்ளது.      


நிலைக்குமா முதலிடம்: 

‘நடப்பு உலக சாம்பியன்’ இந்திய அணி, ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள, இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும்.  

          
தென் ஆப்ரிக்க வாய்ப்பு: 

தென் ஆப்ரிக்க அணி, முதலிடத்துக்கு முன்னேற, முத்தரப்பு தொடரில் மீதமுள்ள லீக் போட்டிகளில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்த வேண்டும். பின், பைனலில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், இந்திய அணி, இங்கிலாந்திடம் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 115 புள்ளிகள் பெறும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி, முதலிடம் பிடிக்கும்.      

ஆஸ்திரேலிய அணி, மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்க, முத்தரப்பு தொடரை கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவை ஒரு போட்டியிலாவது இங்கிலாந்து அணி வீழ்த்த வேண்டும்.

0 comments:

Post a Comment