இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சந்தேகமே!

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளிடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது சந்தேகம்தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டில் இரு அணிகளும் சர்வதேச அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் போட்டியை நடத்தும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் இரு நாட்டு அரசுகளும் முயற்சி எடுக்கும் பட்சத்தில், பொதுவான இடத்தில் வைத்து போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


ஜாகீர் அப்பாஸ்: இரு நாட்டு அரசுகளும் விரும்பினால் இரு நாடுகளிலும் அல்லாமல், பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய அரசு அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) கேட்டுக் கொண்டால், கண்டிப்பாக அதற்கான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் எடுக்கும்.


இரு நாடுகளுக்கிடையில் மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது முக்கியமானது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை நடத்துவது சர்வதேச கிரிக்கெட்டுக்கும் முக்கியமானது.


இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டியை நடத்துவதன் மூலம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் நிதியும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.


ஜாவித் மியான்தத்: சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை நான் இன்னும் பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு பெரிய அளவில் போட்டிகள் இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்திய அணிக்கு நிறைய போட்டிகள் இருக்கும். எனவே அடுத்த ஆண்டில் இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டியை நடத்த பாகிஸ்தான் வாரியம் இப்போதிலிருந்தே திட்டமிட வேண்டும் என்று
கூறியுள்ளார்.


ரஷீத் லத்திப்: போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்பதை ஆதரிக்க முடியாது. அவ்வாறு நடத்தும்போது அந்தப் போட்டி அதன் அழகையும், முக்கியத்துவத்தையும் இழந்துவிடும். இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடக்கும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே வித்தியாசமானது. ஏராளமானோர் போட்டியைக் கண்டுகளிக்க வருவர். தேவைப்பட்டால் இந்தியாவிலேயே இந்தப் போட்டியை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.


2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதன்பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் மொஹாலியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி வந்து சென்றார். இதன்பிறகு இவ்விரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்க பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய அரசும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தது.


இருப்பினும் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம் என சமீபத்தில் பிசிசிஐ செயலர் சீனிவாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.


அதனால் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறக் கூடும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்பிறகு பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டத்தைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று கிலானி மொஹாலி வந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் கண்டுகளித்தார்.


இந்த நிலையில் உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் கிலானி திங்கள்கிழமை விருந்தளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் இதில் முடிவு எட்டப்படவில்லை என்றார்.


இதுதொடர்பாக "தி நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபான் அஹமது கூறியிருப்பது:


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அட்டவணைப்படி தொடர்ந்து போட்டிகள் உள்ளது. ஆனாலும், அதற்கிடையில் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம்.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் இதற்கு முயற்சி செய்யும் பட்சத்தில் இந்த ஆண்டில் விளையாட வாய்ப்புள்ளது. போட்டியை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்றார்.

15 சிக்ஸர்கள் வாட்சன் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் அதிகபட்சமாக ஒருநாள் ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அவர் கனடாவுக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்தார்.


மார்ஷலின் சாதனையை மிர்பூரில் திங்கள்கிழமை வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வாட்சன் முறியடித்தார். இது தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையும் வாட்சன் படைத்தார். இதற்கு முன் மேத்யூ ஹேடன் நியூசிலாந்துக்கு எதிராக 2007-ம் ஆண்டில் 181 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


ஒருநாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். சச்சின் 200 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

சாதனை ஆட்டம்!


இந்த ஒருநாள் ஆட்டத்தை வாட்சனின் சாதனை ஆட்டம் என்று கூறுவது கூடப் பொருந்தும். ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் என்ற சாதனையுடன் இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார் வாட்சன்.


* ஆஸ்திரேலிய அணியில் ஒருநாள் ஆட்டத்தில் அதிபட்ச ரன் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் 3-வது இடத்தைப் பிடித்தார்.


* வாட்சன் குவித்த 185 ரன்களில் 150 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகள் மூலமே எடுக்கப்பட்டன. இதுவும் ஒரு சாதனைதான். இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ் ஒருநாள் ஆட்டத்தில் 126 ரன்களை சிக்ஸர், பவுண்டரிகள் மூலம் எடுத்திருந்தார்.


* இரண்டாவதாக பேட் செய்த அணியில் அதிகபட்ச ரன் (185*) எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் தோனி, இலங்கைக்கு எதிராக 183* ரன்கள் எடுத்திருந்ததே இரண்டாவதாக பேட் செய்த அணியின் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


* வாட்சன் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் இரண்டாவதாக பேட் செய்த போது எடுக்கப்பட்டவை. முதல் இன்னிங்ஸில் வாட்சனின் சராசரி 32.81, இரண்டாவது இன்னிங்ஸில் அவரது சராசரி 64.30.


* இந்த ஆட்டத்தில் வாட்சன் தான் எதிர்கொண்ட 3.2 பந்துகளில் (சராசரியாக) ஒன்றை பவுண்டரிக்கோ அல்லது சிக்ஸருக்கோ விரட்டியுள்ளார். இதற்கு முன் சேவாக் இதில் சாதனை படைத்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 70 பந்துகளில் சதமடித்த அவர், சராசரியாக 3.5 பந்துகளில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸரை எடுத்துள்ளார்.

சச்சின் ஆட்டம் வியப்பளிக்கிறது

வயது கூடிக் கொண்டே சென்றாலும், கடந்த இரு ஆண்டுகளாக சச்சின் சிறப்பாக ஆடி வருவதை நம்பமுடியவில்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

லண்டனில் இந்திய பத்திரிகையாளர்களிடம் அவர் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியது:

வயது கூடிக்கொண்ட சென்றாலும்கூட, சச்சின் சாம்பியனைப் போன்றே விளையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள். இந்திய அணி உலகின் எந்த அணியையையும் வெல்லக்கூடிய திறமைபடைத்த அணி.


இருப்பினும் அவர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடுவதில்லை. மற்ற அணிகளை விட இந்திய அணி சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை என்றார்.


இந்திய அணியின் வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசிய கபில்தேவ், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை என பார்க்கும்போது நிச்சயம் ஒவ்வொரு விளையாடிலும் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளது. வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் போது நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள் என்றார்.


உலகக் கோப்பை இறுதி ஆட்டம் குறித்துப் பேசிய கபில்தேவ், பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. தோனி தேவையான நேரத்தில் சிறப்பாக ஆடினார். வீரேந்திர சேவாக் மிக அபாயகரமான வீரர். அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். ஆட்டத்தை எளிதாக எதிர்கொள்ளக்கூடியவர் என்றார்.


இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து கவலை தெரிவித்த கபில், 1983-ல் கோப்பையை வென்ற அணியைவிட இப்போதைய அணியே சிறந்த அணி. அப்போதைய வீரர்கள் நிறைய ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். இப்போதைய வீரர்கள் மிகுந்த அனுபவமுள்ளவர்கள். அதனால் இப்போதைய அணி சிறந்த அணி என்றார்.


ஐபிஎல் குறித்துப் பேசிய கபில், ஐபிஎல் போட்டியால் எல்லா வீரர்களும் பயனடைந்துள்ளனர். அதில் சாதகத்தைப் போன்று பாதகமும் உள்ளது. தொடர்ந்து விளையாடுவதால் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரஞ்சி வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் பணம் வழங்க வேண்டும்.


விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றால் பள்ளிகள் அளவிலேயே அதற்கான பணிகளை
மேற்கொள்ள வேண்டும். வீரர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் 10 சச்சின்களையோ, தோனிகளையோ உருவாக்க முடியும்.


எங்கள் காலத்தில் கிரிக்கெட்டில் காவஸ்கர்தான் கடவுள் போன்றவர். இப்போது சச்சின் கடவுள் போன்றவர். இனிமேல் அவரைப் போன்று ஒரு வீரர் கிடைக்காவிட்டால் அது வருத்தத்துக்குரியது என்றார்.


கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படுவது குறித்துகேட்டபோது, சட்டம் என்பது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒன்றுதான். எனவே எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

பைனலுக்கு செல்வது எப்படி?

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இதன் பின் அரையிறுதி போட்டியில் பங்கேற்காமல், பைனலுக்கு செல்வது எப்படி என்ற விபரத்தை இங்கே காணலாம்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2010 தொடரில் இருந்த 8 அணிகளின் எண்ணிக்கையுடன் கூடுதலாக, இரண்டு அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. இதன்படி கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து, மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த அணிகள் அனைத்தும், மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும் பட்சத்தில், போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக உயரும். இதைக்குறைப்பதற்காக, இம்முறை 10 அணிகளும், "ஏ', "பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், ஒன்றுக்கொன்று இரண்டு முறை மோதும்.

தவிர, ஏற்கனவே தேர்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த பிரிவில் உள்ள ஏதாவது ஒரு அணியுடன் இரண்டு போட்டியும், மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் பங்கேற்கும்.

இதனால், கடந்த முறை போலவே, ஒரு அணி மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்கும். இதில் வழக்கம் போல் ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் 7 போட்டிகளிலும்,வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாட உள்ளன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கும்.


சென்னை போட்டி:

உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொச்சி, புனே வாரியர்ஸ், கோல்கட்டா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளுக்கு எதிராக உள்ளூரிலும், வெளியூரில் தலா 2 போட்டிகளில் விளையாடும். தவிர, டில்லி, டெக்கான் அணிகளுடன் உள்ளூரிலும், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக வெளியூரிலும் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது.


"பிளே ஆப்':

லீக் போட்டிகள் முடிந்தவுடன், கடந்த முறை போன்று அரையிறுதி போட்டிகள் இம்முறை கிடையாது. ஏனெனில் 10 அணிகளில் முதலிடம் பெற்றும், அரையிறுதியில் தோற்கும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதை தவிர்ப்பதற்காக இம்முறை "பிளே ஆப்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


பைனல் எப்படி?

இதன்படி, மொத்தமுள்ள 10 அணிகளில் "டாப்-4' இடம் பெறும் அணிகள், இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விபரம்:

* முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், மோதும் போட்டியில் (மே 24) வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

* மூன்று, நான்காவது இடத்தை பெறும், அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி, முந்தைய போட்டியில் (மே 24) தோல்வியடைந்த அணியுடன் மோத வேண்டும்.

* இதில் வெற்றி பெறும் அணி, முதலில் பைனலுக்கு முன்னேறிய அணியுடன், வரும் மே 28ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலில் மோதும்.