Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

பயிற்சியாளர் பதவி - ரவி சாஸ்திரி புலம்பல்


‘‘இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் தான். அதேநேரம் பி.சி.சி.ஐ.,யின் இச்செயல் ஆச்சரியம் தரவில்லை,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

இந்திய அணியின் ‘இயக்குனராக’ கடந்த 18 மாதங்கள் இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

புதிய திருப்பமாக ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளேயும், போட்டியில் குதித்தார். கடைசியில் வாய்ப்பு கும்ளேவுக்கு சென்றது. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியது: கடந்த 2014 ஆக., மாதம் ‘இயக்குனராக’ பொறுப்பேற்ற போது, வீரர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். 

கொஞ்சம் கொஞ்சமாக வலிமையாக மீண்டு வந்தோம். டெஸ்ட், ‘டுவென்டி–20’ போட்டிகளில் ‘நம்பர்–1’, ஒருநாள் தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தை பிடித்தோம். அன்னிய மண்ணில் கடுமையாக போராடினோம். இங்கிலாந்து மண்ணில் 24 ஆண்டுக்குப் பின் ஒருநாள் தொடரை வென்றோம். 

1993க்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் கோப்பை கைப்பற்றினோம். 50 ஓவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினோம், ஆசிய கோப்பை சாம்பியன் என, பல வெற்றிகள் கிடைத்தது. இதை எல்லாம் தோல்விகள் என்று கூறினால், அப்புறம் என்னத்த சொல்றது. பயிற்சியாளர் ஆகாதது ஏமாற்றமே. 

அதேநேரம் எதிர்பார்த்தது தான். ஒரு செடியை ஊன்றி, தண்ணீர் ஊற்றி மரமாக வளர்த்து, அது பழம் கொடுக்கும் நிலையில், பறிக்க விடாமல் செய்வது போன்றது தான் இச்செயல். வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின், இந்திய அணி சொந்தமண்ணில் தான் நிறைய டெஸ்டில் பங்கேற்கவுள்ளது. இதில் எப்படியும் சாதிக்கலாம். 

ஆனால் அணி வீரர்களுடன் நான் இல்லை. இது தான் வாழ்க்கை. நான் பதவிக்கு வந்த போது, பி.சி.சி.ஐ.,யை கோர்ட், மீடியா, ரசிகர்கள் என, பல தரப்பும் விளாசிக் கொண்டிருந்தது. 

இந்திய அணி மட்டும் வெற்றி பெற்று வந்தது. கடைசியில் இப்படி ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட் என்று வரும் போது இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார். 

இது குறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு வீரரும் சர்வதேச அரங்கில் உயரத்தில் இருக்கும்போது, ஓய்வு பெற்றுவிடுவர். இதன்படிதான் நானும் செயல்பட முடிவு எடுத்திருந்தேன். கடந்த 2007ல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன். 

ஆனால், சச்சின்தான் இதை தடுத்துவிட்டார். கடந்த 2013ல் ஆஸ்திரேலிய தொடரில் என்னை அணியிலிருந்து நீக்கினர். இது குறித்து எந்த தகவலையும் என்னிடம் முன்பே சொல்லவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், அப்போதே ஓய்வை அறிவித்திருப்பேன். 


எப்போதும் நேர்மை:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியது எனது மகன்களுக்கு பிடிக்கவில்லை. இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் கும்ளே சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். 

வீரர்களுக்கு ஊக்கத்தை அளிப்பார். இந்திய கிரிக்கெட் போர்டு அல்லது வர்ணனையாளர் பதவிக்கு யாரேனும் அழைத்தால், பரிசீலனை செய்வேன். என் ‘பேட்டிங்கை’ போல, வர்ணனையும் நேர்மையுடன்தான் இருக்கும். இவ்வாறு சேவக் கூறினார். 

கும்ளே முதலிடம்

சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே (48 விக்.,), ஹர்பஜன் சிங் (42), கபில்தேவ் (40) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் இங்கு அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வங்கதேசத்தின் முகமது ரபிக் (8 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் அகார்கர், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் தலா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

 652

கடந்த 1985ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 652/7 (டிக்ளேர்) ரன்கள் குவித்தது. இதன்மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2008ல் நடந்த டெஸ்டில் 627 ரன்கள் குவித்த இந்திய அணி, இம்மைதானத்தில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.


83

இங்கிலாந்துக்கு எதிராக 1977ல் நடந்த டெஸ்டில் 83 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரை பெற்றது.


337

கடந்த 2007ல் ஆப்ரிக்க லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆசிய லெவன் அணி 337 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சென்னையில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது.

* பாகிஸ்தானுக்கு எதிராக 1997ல் இங்கு நடந்த போட்டியில் 292 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர். தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இங்கு அதிகபட்சமாக 165 ரன்கள் (எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2011) எடுத்துள்ளது.


307

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 4 போட்டியில் 2 சதம் உட்பட 307 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங் (257 ரன், 7 போட்டி) உள்ளார்.


1018

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். இவர், 12 டெஸ்டில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 1018 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் சச்சின் (970 ரன், 10 போட்டி) உள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய அணி அசத்தல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் தொடரில் பங்கேற்கிறது. 

முதலில் நடந்த ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 0–2 என இழந்தது. கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ம.பி.,யின் இந்துாரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, அஷ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹர்பஜன் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் சர்மா (1) போல்டானார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே, ஸ்டைன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார்.  ஷிகர் தவான் (23) நிலைக்கவில்லை. 

விராத் கோஹ்லி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ரகானே (51) அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ரெய்னா ‘டக்–அவுட்’ ஆனார். அக்சர் படேல் (13), புவனேஷ்வர் குமார் (14) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தோனி அரைசதம் கடந்தார். ஹர்பஜன் சிங் (22) ஆறுதல் தந்தார். உமேஷ் யாதவ் (4) ஏமாற்றினார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (92), மோகித் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 3, மார்னே மார்கல், இம்ரான் தாகிர் தலா 2, ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (17) ஏமாற்றினார். குயின்டன் டி காக் (34), டுமினி (36) ஆறுதல் அளித்தனர். பொறுப்பாக ஆடிய டுபிளசி (51) அரைசதம் கடந்தார். கேப்டன் டிவிலியர்ஸ் (19) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (0) சொதப்பினார். ஸ்டைன் (13) நிலைக்கவில்லை. 

கடைசியில் இம்ரான் (9), மார்கல் (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 43.4 ஓவரில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து ஒரு நாள் தொடர் 1–1 என, சமன் ஆனது.

கோஹ்லி கேப்டனாவதை தடுத்த சீனிவாசன்

சீனிவாசன் மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் மூன்று ஆண்டுக்கு முன்பே கோஹ்லி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகி இருப்பார்,’’ என, முன்னார் தேர்வாளர் ராஜா வெங்கட் தெரிவித்தார்.

கடந்த 2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றது. இதன் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான தோல்விகளை பெற்றது. இதனால் இந்திய அணி கேப்டன் தோனியை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

இது உண்மை தான் என்கிறார் அப்போதைய தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட், 56. இதுகுறித்து கோல்கட்டா பத்திரிகையில் வெளியான செய்தி:

கடந்த 2011–12 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0–3 என, பின்தங்கி இருந்தது. நான்காவது டெஸ்ட் துவங்கும் முன், இதுகுறித்து அறிய மொகிந்தர் அமர்நாத், ஹிர்வானி அங்கு சென்று திரும்பினர்.

அப்போது,‘ பல்வேறு காரணங்களால் இந்திய அணி பிளவுபட்டுள்ளது. விளையாட்டு உணர்வுகளே இல்லாமல் வீரர்கள் உள்ளதாக,’ தெரிவித்தனர்.

இதனால் ‘ஒருநாள் தொடருக்கு முன் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும். மீண்டும் விளையாட்டு உணர்வை கொண்டு வர கோஹ்லி தான் சரியான நபர்,’ என முடிவு செய்தோம்.

இதையடுத்து 3 ஆண்டுக்கு முன்பே கோஹ்லியை கேப்டனாக்குவது குறித்து தேர்வாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

ஆனால் அன்னிய மண்ணில் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது கேப்டனை மாற்ற வேண்டும் எனில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.

எங்களின் முடிவுக்கு அப்போதைய தலைவர் சீனிவாசன் சம்மதிக்கவில்லை. எங்கள் முயற்சியை தொடர்ந்த போதும், சீனிவாசன் கடைசி வரை பதில் தெரிவிக்கவில்லை. 

இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். 

பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பானை சமாளிக்க, இரண்டு சிறிய நாற்காலி ‘பார்முலாவை’ பயன்படுத்தி பயிற்சி செய்தனர்.


புதிய திட்டம்:

அடுத்து, சிட்னியில் 26ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க, ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ஆயத்தமாகிறது.

இங்கு ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்குமா அல்லது சுழலுக்கு சாதகமாக தொடருமா என, இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுக்கு ‘பவுன்சர்’ வீசிய ஸ்டார்க், ஜான்சன், ஹேசல்வுட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர், 66, நேற்று புதிய திட்டத்தை கையாண்டார். 

பயிற்சியின் போது ரெய்னாவை மட்டும் தனியாக அழைத்துச் சென்றார். டென்னிஸ் ‘ராக்கெட்டை’ மூலம் ரெய்னாவை நோக்கி டென்னிஸ் பந்தை வேகமாக அடித்தார். இந்த பந்தின் எடை குறைவு என்பதால் தரையில் பட்டு நன்கு உயரமாக முகத்தை நோக்கி வந்தது. 

இதை எப்படி சமாளிப்பது என, பயிற்சியில் ஈடுபட்டார் ரெய்னா. உடலில் படும் படி வந்த பந்துகளை ‘ஹூக் ஷாட்’ அடித்து பழகினார். ஸ்டார்க் வீசுவதைப் போல வேகமாக வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறினார். இதையடுத்து, ரெய்னாவுக்கு உரியா ஆலோசனைகள் வழங்கினார் கேப்டன் தோனி.

இந்த பயிற்சி ரெய்னாவின் ‘ஷார்ட் பிட்ச்’ பலவீனத்தை சரியாக்க உதவும் என, நம்பப்படுகிறது.

ரெய்னாவுக்கு திருமணம் - தோழியை கரம்பிடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரரான ரெய்னாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் ரெய்னா, 28. 

இதுவரை 18 டெஸ்ட் (768 ரன்கள்) , 213 ஒரு நாள் (5316), 44 ‘டுவென்டி–20’ (947) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். 

இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இது குறித்து ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,‘‘ ரெய்னா தாயாரின் தோழியின் மகள் பிரியங்கா சவுத்ரி. 

சிறு வயதிலிருந்தே ரெய்னாவும், பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள். உ.பி., மாநிலம் மீரட்டை சேர்ந்த பிரியங்கா நெதர்லாந்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்திய அணி வீரர்கள், உலக கோப்பை தொடரை முடித்து, மார்ச்30ம் தேதி தாயகம் திரும்புகின்றனர். 

ஏப்ரல் 1ம் தேதி ரெய்னா, தனது நண்பர்களுக்கு விருந்து அளிக்கிறார். டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏப்ரல் 3ம் தேதி காலை நிச்சயதார்த்தமும், அன்று மாலையில் ரெய்னாவுக்கும், பிரியங்காவுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர்கள், உறவினர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது



வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன். 

அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய நிலையில் அந்த நாட்டு அணியில் கடைப்பிடிக்கப்படும் இன ரீதியான இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறி 2001–ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறினார். 

இதன் பின்னர் 2004–ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்த கெவின் பீட்டர்சன் அருமையான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்தாலும், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகும். 

2008–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கெவின் பீட்டர்சன், பயிற்சியாளர் பீட்டர் மூர்சுடனான மோதல் காரணமாக 5 மாதத்தில் கேப்டன் பதவியை இழந்தார். 

இதுமட்டுமின்றி 2012–ம் ஆண்டில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விமர்சித்து சமூக வலைதளம் மூலம் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு செய்தி அனுப்பி சர்ச்சையில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார். 

2010–ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கெவின் பீட்டர்சன் 2005, 2009, 2010–11, 2013–ம் ஆண்டுகளில் ஆஷஸ் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்தார். 

சமீபத்தில் 0–5 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இருந்த கெவின் பீட்டர்சன் மோசமான ஆட்டம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ‘அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. 

எனவே தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆஷஸ் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து அணியை வலுப்படுத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு கட்டமாக பயிற்சியாளர் ஆண்டி பிளவர் நீக்கப்பட்டார். மேலும் கெவின் பீட்டர்சனையும் அணியில் இருந்து முழுமையாக கழற்றி விடுவது என்ற துணிச்சலான நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது. 

இந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் வங்காளதேசத்தில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது, பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. ‘அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு புதிய வலுவான அணியை உருவாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை அணி நிர்வாகத்தினரால் ஒருமனதாக எடுக்கப்பட்டது. 

இருப்பினும் பீட்டர்சனை நீக்க எடுத்த முடிவு கடினமானதாகும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பீட்டர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 9 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து விளையாடியது பெருமையாக கருதுகிறேன். எனது நம்பமுடியாத கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

இங்கிலாந்து அணியின் அற்புதமான வெற்றிகளில் பங்கேற்றதையும், சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடியதையும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். இருப்பினும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.   

33 வயதான கெவின் பீட்டர்சன் 104 டெஸ்டில் விளையாடி 23 சதங்களுடன் 8181 ரன்னும், 136 ஒருநாள் போட்டியில் ஆடி 9 சதங்களுடன் 4440 ரன்னும், இருபது ஓவர் போட்டியில் 37 ஆட்டத்தில் விளையாடி 1176 ரன்னும் எடுத்துள்ளார்.

முத்தான மூன்று கலவை கோஹ்லி



சச்சின், டிராவிட், சேவக் ஆகிய மூன்று வீரர்களின் கலவையாக இளம் விராத் கோஹ்லி உள்ளார்,’’ என, மார்டின் குரோவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. நியூசிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதுவரை பங்கேற்ற 130 ஒருநாள் போட்டிகளில் 18 சதம், 30 அரைசதம் உட்பட மொத்தம் 5,445 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் கூறியது:

இந்தியாவின் அசத்தலான இளம் வீரர் கோஹ்லி. இவர் சச்சின், டிராவிட், சேவக் என, மூன்று பேரும் சேர்ந்த கலவையாக உள்ளார். டிராவிட்டிடம் இருந்து தீவிரமாக போராடும் குணம், சேவக்கிடம் இருக்கும் துணிச்சலை பெற்றுள்ள இவர், சச்சினைப் போல அசாதாரணமான வீரராக உள்ளார். 

மொத்தத்தில், இவர்களிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்று, தனக்கென தனி பாணியை வகுத்துள்ளார். இவை அனைத்தும் சேர்ந்து கோஹ்லியை சிறப்பான வீரராக மட்டும் மாற்றவில்லை. 

கிரிக்கெட்டில் ஒரு சிறந்த மேதையாக உருவாக்கியுள்ளது. அதாவது மாணவனாக இருந்த இவர், ஆசிரியராக விரைவில் மாறிவிட்டார். எதிர்காலத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிடுவார்.

கடந்த 2008ல் நடந்த பிரிமியர் தொடரில், பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதே கோஹ்லியை கவனித்தேன். கிரிக்கெட்டினை கற்றுக்கொள்ளும் ஆர்வம், எழுச்சி அதிகமாக இருந்தது.

அதிகமான குழப்பம் காரணமாக, யாரைப் போல, எப்படி விளையாடுவது என, கேட்பார். எதைப்பற்றியும் சிந்திக்காமல் நேராக அடித்து விளையாடினால் போதும் என, அவரை உற்சாகப்படுத்தினேன். இன்று இதுதான் இவருக்கு ‘பெஸ்ட் ஷாட்’ ஆகவுள்ளது. 

தவிர, துணிச்சலாகவும், அழகாகவும் அடித்து விளையாடுவது தான் இவரது ‘ஸ்டைல்’. தவிர, சச்சினிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டுள்ளார். கோஹ்லியின் குணத்தை பார்க்கும் போது பெரும்பாலும் சச்சினைப் போலவுள்ளது.

அடுத்து வரும் ஆண்டுகளில், ஏறக்குறைய சச்சினைப் போலவே மாறிவிடுவார். அதேநேரம், களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது. சச்சின், டிராவிட் போன்றவர்கள் கோஹ்லிக்கு இதை கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு மார்டின் குரோவ் கூறினார்.

பாரத ரத்னா பெற்றார் சச்சின்



நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார்.  இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.             

இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.  

இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் முன்வந்தது.                        
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன், ஓய்வு பெற்றார் (நவ., 16) சச்சின். அன்றைய தினம்  ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு  அறிவித்தது. 

டில்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பிரனாப் முகர்ஜி,  இவ்விருதை சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 


இதிலும் சாதனை:

இன்று ‘பாரத ரத்னா’ விருதை பெற்ற 40 வயதான சச்சின், இவ்விருதை குறைந்த வயதில் வென்றவர் என்ற பெருமை பெற்றார். தவிர, முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சலுகைகளை அனுபவிக்கும் தோனி



இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.        
          
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது.

இதனிடையே, சமீப காலமாக அன்னிய மண்ணில் தோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்விகளை சந்திக்கிறது. இதனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.         
         
இதுகுறித்து அவர் கூறியது:              
   
என்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.    
              
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.        
          
இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.                  
எங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் ரூ.௨௦௦ மட்டுமே பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல.                  
ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.                  
பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.       
           
ஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.                  
இவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.

இந்திய அணி பிந்தியது ஏன்?



இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி, தொடர்ந்து செய்யும் தவறுகளால், அன்னிய மண்ணில் தோல்வி தொடர் கதையாகிறது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0–4 என, இழந்தது. உலக கோப்பை தொடரில் ‘நடப்பு சாம்பியன்’, ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ என்ற அந்தஸ்துடன் அங்கு சென்று, இப்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக 8வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க மறுப்பதால், தோல்வி தொடர் கதையாகிறது. தற்போது நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி அடைந்த தோல்விக்கான காரணங்கள்:


தெளிவற்ற கேப்டன்:

தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த தோல்விக்குப் பின், ‘மிஸ்டர் கூல்’ கேப்டன் தோனி, நியூசிலாந்து தொடருக்கு ஏதாவது மாற்றங்கள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்போதும் போல களமிறங்க, 8வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்தியாவை பந்தாடி விட்டது.

இத்தொடரில் ‘டாஸ்’ வென்றது; பேட்டிங்கில் ஆறுதல் தந்தது மட்டும் தான் தோனி செய்த சரியான செயல். மற்ற அனைத்திலும் குழப்பவாதியாக மாறிவிட்டார்.

துவக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில், 4வது போட்டியில் ஷிகர் தவானை நீக்கிவிட்டு, கோஹ்லியை களமிறக்கி தவறு செய்தார். ரோகித்துடன் ரகானேவை அனுப்பியிருக்க வேண்டும்.

ரெய்னா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, முதல் மூன்று போட்டிக்குப் பின் தான் இவரை வெளியேற்றினார். இதற்குள் தொடரை வெல்ல முடியாத நிலை வந்துவிட்டது. அஷ்வினை தொடர்ந்து அணியில் சேர்க்கிறார்.

கிழித்து தைத்த டெய்லர் - 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வி



ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பவுலிங், பேட்டிங்கில் ஒட்டு மொத்தமாக சொதப்பிய இந்திய அணி, 87 ரன்களில் வீழ்ந்து, நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுக்குப் பின் மோசமான தோல்வியை பதிவு செய்தது. 

ராஸ் டெய்லர் மீண்டும் சதம் அடித்து அசத்த, ஒருநாள் கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இந்திய அணி, 0–3 என தொடரை இழந்தது. கடைசி ஒருநாள் போட்டி, வெலிங்டனில் நேற்று நடந்தது.
இத்தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங் தேர்வு செய்தார்.


மீண்டும் தவான்:

ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ‘ஆல் ரவுண்டர்’ ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, ஷிகர் தவான் மீண்டும் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில், டிம் சவுத்திக்கு பதில் மாட் ஹென்றி அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். பென்னட் இடத்தில் மெக்லீனகன் களமிறங்கினார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (17), கப்டில் (16) ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. இதனால் 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி தடுமாறியது. பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி, வழக்கம் போல இந்திய வீரர்களின் பவுலிங்கை எளிதாக சமாளித்தது. 


டெய்லர் சதம்:

வில்லியம்சன், இத்தொடரில் தொடர்ந்து 5வது அரை சதத்தை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்த போது வில்லியம்சன், 88 ரன்களில் அவுட்டானார். 

கேப்டன் பிரண்டன் மெக்கலம் (23) நிலைக்கவில்லை. தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய டெய்லர், ஷமி வேகத்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் 10வது சதத்தை பூர்த்தி செய்தார். இத்தொடரில் தொடர்ந்து அடிக்கும் இரண்டாவது சதம் இது. இவர் 102 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வந்த வேகத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்த நீஷம், போட்டியின் கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்ட, நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. நீஷம் (34), ரான்கி (11) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் ஆரோன் 2, புவனேஷ்வர், ஷமி, கோஹ்லி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


ரோகித் சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, ஆமைவேக துவக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா (4), ஷிகர் தவான் (9) அடுத்தடுத்து நடையை கட்டினர். பின் வந்த ரகானே (2) மறுபடியும் ஏமாற்றினார். இதனால் இந்திய அணி, 15 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த அம்பதி ராயுடுவும், நிதானத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 20 ஓவரில் 58 ரன்கள் மட்டுமே எடுக்க, ரசிகர்கள் வெறுப்படைந்தனர். ராயுடு (20) அவுட்டானார். 


கோஹ்லி நம்பிக்கை:

பின் இணைந்த கோஹ்லி, தோனி ஜோடி சற்று நம்பிக்கை தந்தது. நீஷம் பந்தில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்த கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 30வது அரைசதம் கடந்தார்.

ரன்வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கோஹ்லி, 82 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 138 ரன்கள் தேவை என்ற நிலையில், அஷ்வின் (7), ரவிந்திர ஜடேஜாவும் (5) விரைவில் வெளியேற, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. மனம் தளராமல் போராடிய தோனி, 47 ரன்களில் அவுட்டானார்.

புவனேஷ்வர் (20), ஆரோன் ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி 49.4 ஓவரில், 216 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாகி’ 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். ஒருநாள் தொடரை 4–0 என வென்ற நியூசிலாந்து அணி, கோப்பை தட்டிச் சென்றது.


மோசமான தோல்வி:

 1975–76, 1980–81ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 33 ஆண்டுக்குப் பின், மீண்டும் மோசமான தோல்வியடைந்துள்ளது.


தோனி ‘8000’

நேற்று தோனி 1 ரன் எடுத்தபோது ஒருநாள் அரங்கில், 8000 ரன்கள் எடுத்த வீரரானார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் (214) இம்மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி.

இந்தியாவின் கங்குலி (200), சச்சின் (210), வெஸ்ட் இண்டீசின் லாரா (211) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்கள் மூவருமே பேட்டிங்கில் முதல் மூன்று இடத்தில் களமிறங்கியவர்கள். பின்வரிசையில் களமிறங்கும் (5–7 இடம்) தோனி, அதிவேகமாக 8000 ரன்களை எட்டியுள்ளார்.


கைகொடுக்காத ராசி

* நியூசிலாந்து தொடரின் ஐந்து போட்டியிலும் கேப்டன் தோனி ‘டாஸ்’ வென்றார். இப்படி, இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் அனைத்து போட்டியிலும் தோனி ‘டாஸ்’ வெல்வது இரண்டாவது முறை.

* இதற்கு முன் 2009ல் வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது, ஒருநாள் தொடரின் 4 போட்டியிலும் ‘டாஸ்’ வென்றார். அப்போது தொடரை 2–1 என கைப்பற்றிய இந்திய அணி, தற்போது 0–4 என இழந்தது.


தோல்விக்கு என்ன காரணம்

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில், ‘‘தொடர் முழுவதும் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். எங்களைப் பொறுத்தவரை சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாற்றிக் கொண்டு, திறமை வெளிப்படுத்தாதது தான் தோல்விக்கு முக்கிய காரணம்,’’ என்றார்.

அதலபாதாளத்தில் இந்திய பவுலர்கள்



ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. சமீபத்திய 20 போட்டிகளில் 250 அல்லது அதற்கு மேலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ந்து  சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது.

அதேநேரம், அன்னிய மண்ணில் பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்றது, இலங்கை மற்றும் பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளை மட்டும் வென்றது.

இதற்கு இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு முக்கிய காரணம். கடந்த ஜன. 1, 2013 முதல் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில், 20ல் 250 அல்லது அதற்கு மேல் என, ரன்களை விட்டுக் கொடுத்தது. 

இதில் 11 போட்டிகளில் எதிரணியினர் 300 அல்லது அதற்கும் மேல் ரன்களை எடுத்துள்ளனர். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று போட்டியிலும், சராசரியாக 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அணியின் முன்னணி பவுலர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில் புவனேஷ்வர் குமார், 3 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார்.

அணியின் தற்போதைய ‘சீனியர்’ இஷாந்த் சர்மா, கடந்த இரு போட்டிகளில் 2 விக்கெட் கைப்பற்றினார். முகமது ஷமி மட்டும் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளார். இவர் கடந்த நான்கு போட்டிகளில் 10 விக்கெட் சாய்த்துள்ளார்.ஆனாலும் ரன்களை கட்டுப்படுத்த தவறினார்.

சுழற்பந்துவீச்சும் தேறவில்லை. அணியின் முன்னணி வீரர் அஷ்வின், நான்கு போட்டிகளில் ஒரு விக்கெட் தான் கைப்பற்றினார். ரவிந்திர ஜடேஜா (4) சற்று பரவாயில்லை.

இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட்



ஐ.சி.சி., கூட்டத்தில் பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறிய நிலையில், இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட் வருகிறது. ஐ.சி.சி., புதிய தலைவராக, சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. 

இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு  வருமானம் குறைந்துவிடும். தவிர, தலைவர் பதவிக்கு ‘டாப்–3’ நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே வரமுடியும்.

இது ஐ.சி.சி.யை., அபகரிக்கும் செயல் என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று துபாயில் துவங்கிய ஐ.சி.சி., கூட்டத்தில் புதிய விதிகள் தாக்கல் செய்யப்பட்டன. 


அதிகரித்த எதிர்ப்பு:

இது நிறைவேற 10ல் 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த தென் ஆப்ரிக்காவுடன், ஆசியாவின் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என, மொத்தம் 4 நாடுகள் இணைந்து கொண்டன. இதனால், சிக்கல் ஏற்பட்டது.  


சீனிவாசன் தலைவர்:

இருப்பினும், ஆறு மணி நேர விவாதத்துக்குப் பின்.  பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்கப்பட்டன. அதேநேரம், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி.,யை கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு அதிக எதிர்ப்பு காணப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.சி.சி.,க்கு வலிமையான தலைமை தேவை என்பதால், கிரிக்கெட்டை வழிநடத்தும் பொறுப்பு பி.சி.சி.ஐ.,க்கு தரப்பட்டது. 

இதன் அடிப்படையில், ஐ.சி.சி., யின் புதிய தலைவராக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவர், 2016 வரை இப்பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.

மூவர் கூட்டணிக்கு செல்வாக்கு

ஐ.சி.சி., இரண்டு நாள் கூட்டம் இன்று துபாயில் துவங்குகிறது. இதில், வலிமையான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளின் கட்டுப்பாட்டில் ஐ.சி.சி., கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. 

கடந்த 1909ல் துவங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), மொத்தம் 106 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.      

ஐ.சி.சி.,க்கு கிடைக்கும் 75 சதவீத வருமானம், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 நிரந்தர உறுப்பினர்களுக்கு சம அளவில் பிரித்து தரப்படுகிறது. ஆனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது. ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் ஆண்டுக்கு குறைவான போட்டிகளில் பங்கேற்ற போதும், சமமான தொகை தான் கிடைத்தன.      


முதல் எதிர்ப்பு: 

இதற்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஐ.சி.சி.,யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை வைத்தது. இதன் படி, நிதி, வர்த்தகம், நிர்வாகம் தொடர்பாக, புதிய பரிந்துரைகள் வைக்கப்பட்டன.

 இதை இந்தியாவுடன் இணைந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுகள் (இ.சி.பி.,) முன்மொழிந்தன.      


முழுக் கட்டுப்பாடு: 

இது நிறைவேறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி., வந்துவிடும். இந்த தீர்மானத்துக்கு, 10ல் 7 நிரந்த உறுப்பு நாடுகள் ஆதரவு தேவை. 

வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு ஆதரவாக தென் ஆப்ரிக்கா, இலங்கை போர்டுகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பாலான நாடுகள் என்ன செய்வது என முடிவு செய்யாமல் உள்ளன. இருப்பினும், புதிய செயல்திட்டத்தை எப்படியும் தடுப்பர் என்றே தெரிகிறது.  

    
பி.சி.சி.ஐ., மிரட்டல்: 

அதேநேரம், இந்த தீர்மானம் நிறைவேறுவதைப் பொறுத்து தான், அடுத்து வரும் 50 ஓவர், ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர்களில் பங்கேற்பது குறித்து இந்திய அணி முடிவு செய்யும் என, பி.சி.சி.ஐ., தெளிவாகத் தெரிவித்துவிட்டதாம். எதிர்கால அட்டவணை குறித்து சம்பந்தப்பட்ட போர்டுகளுடன், பி.சி.சி.ஐ., நேரிடையாக விவாதிக்கத் துவங்கி விட்டது.    
  
இந்தியா எந்த அணிகளுடன் இனி விளையாடப் போகிறது என்பது குறித்து முடிவு செய்து, ஐ.சி.சி.,யிடம் தெரிவிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இதனால், இன்று ஐ.சி.சி., கூட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

நாளை 4வது போட்டி- வெற்றி கட்டாயத்தில் இந்தியா



டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 24 ரன்னிலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன்னிலும் இந்திய அணி தோற்றது. 3–வது போட்டி ‘டை’ ஆனது. இந்தியா 0–2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் 4–வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்து இருந்தது. அதே நிலை நியூசிலாந்திலும் தொடரக்கூடாது என்ற கவலையில் இந்தியா உள்ளது.

அதற்கு ஏற்ற வகையில் நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடுவார்கள்.

கடந்த போட்டியில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

தொடக்க வீரர்கள் தவான், ரோகித்சர்மா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரகானே, ரெய்னா ஆகியோர் தங்களது பங்களிப்பை அதிகமான உணர்த்த வேண்டும். டோனி இந்த முறையாவது ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. குப்தில், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சவுத்தி, மெக்லகன் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

நாளைய ஆட்டமும் பகல்–இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்தப்போட்டி சோனி சிக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:–

இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகார் தவான், வீராட் கோலி, ரகானே, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடு, ஈஷ்வர் பாண்டே, இஷாந்த்சர்மா, அமித் மிஸ்ரா.

நியூசிலாந்து: மேக்குல்லம் (கேப்டன்), குப்தில், ரைடர், வில்லியம்சன், ரோஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுகே ரோஞ்சி, நாதன் மேக்குல்லம், சவுத்தி, மில்ஸ், பென்னட், மெக்லகன், ஜேம்ஸ் ரீசம்.

தோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு



இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். 

இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது. ஆனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.

இதுகுறித்து அவர் கூறியது:

என்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.

எங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ. 50 பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல. 

ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.

ஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.

இவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.

நம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா



நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை இழந்தது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–-1 என பின்தங்கியிருந்தது. 

இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (20), கப்டில் (44) ஜோடி அசத்தல் துவக்கம் அளித்தது. போட்டியின் 17 ஓவர் முடிவில், லேசான மழை குறுக்கிட்ட காரணத்தினால் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. 

வில்லியம்சன் (77), ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்து அணி 33.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

ராஸ் டெய்லர் (57) அரைசதம் கடந்து வெளியேறினார். கடைசி நேரத்தில், அதிரடியாக ரன்கள் சேர்த்த கோரி ஆண்டர்சன் 17 பந்தில் 44 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 42 ஒவரில், 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணிக்கு ‘டக்வொர்த்-–லீவிஸ்’ முறைப்படி 297 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (20), ஷிகர் தவான் (12) ஜோடி சொதப்பல் துவக்கம் அளித்தது. ரகானே (35) தாக்குபிடிக்கவில்லை. கோஹ்லி (78) அரைசதம் கடந்தார். 

ரெய்னா (35), கேப்டன் தோனி (56) போராடியும் வெற்றி கிடைக்கவில்லை. இந்திய அணி, 41.3 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 

இதையடுத்து ‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

துவக்க வீரராக களமிறங்கினால் ஜொலிப்பாரா கோஹ்லி?



தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மாவுக்குப் பதில், விராத் கோஹ்லியை துவக்க வீரராக களமிறக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994ல் நியூசிலாந்து சென்றது இந்திய அணி. 

அப்போது,நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதில் துவக்க வீரராக இருந்த சித்து காயமடைய, இரண்டாவது போட்டியில் யாரை துவக்கத்துக்கு களமிறக்குவது என, குழப்பம் ஏற்பட்டது.       

அதுவரை 4, 5, 6 வது இடங்களில் களமிறங்கி வந்த சச்சின். முதன் முறையாக இப்போட்டியில் துவக்க வீரராக இறக்கப்பட்டார். இது இவரது ௭௦வது ஒருநாள் போட்டி. இதில் 49 பந்தில் 82 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்கு பின் துவக்க வீரராக பல்வேறு சாதனைகள் படைத்தார்.

இப்போது இந்திய அணிக்கு மீண்டும் துவக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காம்பிர், சேவக்கிற்கு மாற்றாக வந்தது ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி.    
   
ரோகித் ஏமாற்றம்: இதில் ரோகித் சர்மா சமீப காலமாக ஏமாற்றுகிறார். தென் ஆப்ரிக்க மண்ணில், ஸ்டைனின் 17 பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தற்போது நேப்பியரில் நடந்த முதல் போட்டியில், 23 பந்தில் 3 ரன்கள் தான் எடுத்தார்.       

இதனால், சச்சினை போல விராத் கோஹ்லியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.       

மீண்டும் வாய்ப்பு: கோஹ்லி கடந்த 2008, ஆக., 18ல் இலங்கைக்கு எதிராக அறிமுகமானது போது, துவக்க வீரராகத்தான் வந்தார். முதல் 5 போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட, மொத்தம் 149 ரன்கள் எடுத்தார். 

பின், பேட்டிங்கில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட கோஹ்லி, தற்போது 3வது வீரராக வருகிறார். இவருக்கு மீண்டும் துவக்க வீரராக வாய்ப்பு தந்தால், முழுமையாக 50 ஓவர்களும், பேட்டிங்கில் நீடிக்கலாம். சச்சினைப் போல எண்ணற்ற சாதனைகள் படைக்கலாம்.       

ரெய்னா ஏமாற்றம்: இதேபோல, ‘மிடில் ஆர்டரில்’ ரெய்னா, அணியை கைவிடுகிறார். கடந்த 2005ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரெய்னா, இதுவரை 187 போட்டிகளில் 4,530 ரன்கள் (3 சதம், 29 அரைசதம்) எடுத்துள்ளார்.       
ஆனால், கடைசியாக பங்கேற்ற 25 போட்டிகளில், ஒருமுறை மட்டும் தான் அரைசதம் (65 ரன்கள்) அடித்தார். மற்றபடி மொத்தம் 463 ரன்கள் தான் எடுத்துள்ளார்.       

‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளில் அவுட்டாவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் புஜாராவை அணியில் சேர்த்தால் நல்லது.       

உலக கோப்பை துவங்க இன்னும் ஒரு ஆண்டு (2015) மட்டும் உள்ள நிலையில், அணியில் தேவையான மாற்றங்களை செய்து சோதித்து பார்க்க இதுவே சரியான தருணம் என்பதை கேப்டன் தோனி உணர வேண்டும்.